July 8, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

சிறிசபாரட்ணம் நினைவேந்தல் காணிக்காரர் விடுவிப்பு; வலி.கிழக்கு பிரதேச சபை தவிசாளரிடம் பொலிஸார் வாக்குமூலம்

நினைவேந்தலுக்கும் காணி உரிமையாளர்களுக்கும் எந்தத் தொடர்பும் கிடையாது என ரெலோவின் மாவட்டப்பொறுப்பாளரும் வலிகாமம் கிழக்குப் பிரதேச சபை தவிசாளருமான தியாகராஜா நிரோஷ் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் சென்று தெரிவித்ததனை அடுத்து சிறிசபாரட்ணத்தின் நினைவேந்தல் இடம்பெற்ற காணி உரிமையாளர் பொலிஸ் நெருக்குவாரங்களில் இருந்து விடுவிக்கப்பட்டார்.

கடந்த வியாழக்கிழமை தமிழீழ விடுதலை இயக்கத்தின் மறைந்த தலைவர் சிறிசபாரட்ணத்தின் 35 ஆவது நினைவு தினத்தினை அவர் மறைந்த இடமான உரும்பிராய் தோட்டவெளியில் அனுஷ்டித்தனர். ஒவ்வொரு ஆண்டும் அனுஷ்டிக்கப்படும் குறித்த இடம் தனியாருக்குச் சொந்தமான காணி ஆகும். எனினும் நினைவேந்தல்கள் மேற்கொள்வதை தடைசெய்யும் முகமாக குறித்த தோட்டங்களுக்கு செல்லும் பாதைகள் அடைக்கப்படவேண்டும் என ஏற்கனவே காணி உரிமையாளர்களுக்கு அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டு வந்தன.

இந் நிலையில் கடந்த 5 ஆம் திகதி குறித்த இடம் சிரமதானம் மூலமாக சுத்திகரிப்பட்டதையடுத்து அழுத்தங்கள் காரணமாக காணி பராமரிப்பாளர்களால் அஞ்சலி நடைபெறும் இடம் வேலி மூலம் அடைக்கப்பட்டிருந்து. இவ்வாறு அடைக்கப்பட்டிருந்த இடத்தில் பாதை வடிவில் காணப்பட்ட இடத்தினைத் திறந்து வலிகாமம் கிழக்குப் பிரதேச சபை தவிசாளர் அஞ்சலி செலுத்த சென்றிருந்தார்.

அதனைத் தொடர்ந்து அங்கு வருகை தந்த தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவர்கள் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் குறித்த இடத்தில் அஞ்சலி செலுத்தினர்.இந்நிலையில் கோப்பாய் பொலிஸ் நிலையத்திற்கு குறித்த காணியின் பங்கினைக் கொண்ட உள்நாட்டில் உள்ள பராமரிப்பாளர் அழைக்கப்பட்டு விசாரணைகள் இடம்பெற்று வாக்குமூலங்கள் பெறப்பட்டன.
தொடர்ச்சியாக காணி பராமரிப்பாளர் இரு நாட்களாக பொலிஸ் நிலையத்திற்கு அலைக்கழிக்கப்பட்டிருந்த நிலையில் அவர் தவிசாளருக்கு தொலைபேசி வாயிலாக தன் நிலைமையினை அறிவித்தார். இதனையடுத்து கோப்பாய் பொலிஸ் நிலையத்திற்கு சென்ற தவிசாளர் நினைவேந்தல் விடயத்திற்கும் இவர்களுக்கும் எதுவித தொடர்புகளும் கிடையாது என தெரிவித்ததனை தொடர்ந்து காணிப்பராமரிப்பாளர் வீடு செல்ல அனுமதிக்கப்பட்டார்.

இதேவேளை தனியார் காணிக்குள் நுழைந்து அஞ்சலித்தமை மற்றும் தனிமைப்படுத்தல் சட்டவிதிகளை மீறியமை தொடர்பாக வலிகாமம் கிழக்குப் பிரதேச சபை தவிசாளர் தியாகராஜா நிரோஷிடம் கோப்பாய் பொலிஸார் வெள்ளிக்கிழமை இரவு வாக்குமூலம் ஒன்றைப்பதிவு செய்துள்ளனர்.