July 8, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

”இலங்கையில் சகல பாடசாலைகளும் மறு அறிவித்தல் வரையில் மூடப்பட்டிருக்கும்”

இலங்கையில் அனைத்து பாடசாலைகளும் மறு அறிவித்தல் வரையில் மூடப்பட்டிருக்கும் என்று கல்வி அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

நாட்டில் நிலவும் கொவிட் தொற்று நிலைமையை கருத்திற்கொண்டு இந்தத் தீர்மானத்தை எடுத்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

கொவிட் தொற்றுப் பரவல் அச்சுறுத்தல் காரணமாக ஏப்ரல் 27 ஆம் திகதி முதல் அனைத்து பாடசாலைகளையும் தற்காலிகமாக ஒருவாரத்திற்கு மூடுவதற்கு கல்வி அமைச்சு தீர்மானித்தது.

எனினும் தொற்றுப் பரவல் நிலைமையால் இன்று 7 ஆம் திகதி வரையில் பாடசாலைகள் மூடப்படுமென கடந்த வாரத்தில் அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் நாட்டு நிலைமையை கருத்திற்கொண்டு இப்போதைக்கு பாடசாலைகளை திறக்க வேண்டாம் என்று சுகாதார தரப்பினர் ஆலோசனை வழங்கியுள்ளனர். இதன்படி மறு அறிவித்தல் வரையில் பாடசாலைகளை மூடுவதற்கு கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.

இதேவேளை பல்கலைக்கழகங்கள், முன்பள்ளிகள் மற்றும் மற்றைய கல்வி நிறுவனங்களும் மறு அறிவித்தல் வரையில் மூடப்படும் என்றும் கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளார்.