October 6, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

ஊடகவியலாளர் நிமலராஜன் படுகொலை வழக்கு; சந்தேக நபர்கள் ஆறு பேரும் விடுவிப்பு

ஊடகவியலாளர் மயில்வாகனம் நிமலராஜன் படுகொலை வழக்கின் சந்தேக நபர்கள் 6 பேருக்கு எதிராக குற்றவியல் நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்ல முடியாது என சட்டமா அதிபர் திணைக்களம் யாழ்.நீதிவான் நீதிமன்றத்துக்கு பரிந்துரைத்துள்ளதனையடுத்து 6 சந்தேக நபர்களையும் விடுவிக்க யாழ்.நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2000 ஆம் ஆண்டு, ஒக்டோபர் 19 ஆம் திகதி இரவு 10 மணியளவில் யாழ்ப்பாணம் நகரின் உயர் பாதுகாப்பு வலயப் பகுதியாக இருந்த கச்சேரியடிப் பகுதியிலுள்ள நிமலராஜனின் வீட்டுக்குள் நுழைந்த ஆயுததாரிகள் அவரை சுட்டுப் படுகொலை செய்தனர்.

அவர் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்ட பின்னர், அவரது வீட்டுக்குள் கைக்குண்டை வீசி விட்டுச் சென்றதில், நிமலராஜனின் தந்தை, தாய், மருமகன் உள்ளிட்டோர் படுகாயமடைந்தனர்.

நிமலராஜன் படுகொலை தொடர்பாக யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தில் பி 423/2000 என்ற வழக்கு விசாரணை இடம்பெற்று வந்த நிலையில், கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாக கிடப்பில் போடப்பட்டது. பின்னர் சட்டமா அதிபரின் ஆலோசனைக்காக கடந்த பல ஆண்டுகளாக வழக்கு விசாரணை நிலுவையில் இருந்தது.

இந்நிலையில், நிமலராஜன் படுகொலை வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள 6 பேருக்கும் எதிரான குற்றவியல் நடவடிக்கையை தொடர்ந்து முன்னெடுக்க முடியாது என சட்டமா அதிபர் பரிந்துரை வழங்கியுள்ளார்.

அத்துடன், வழக்கின் சந்தேக நபர்களை விடுவித்து 14 நாள்களுக்குள் அறிக்கையிடுமாறும் பொலிஸ் திணைக்களத்தின் சட்டப் பிரிவு பணிப்பாளருக்கு சட்டமா அதிபர் பணித்துள்ளார்.