July 4, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘ரிஷாட் பாராளுமன்றம் வருவதை தடை செய்யும் அதிகாரம் சரத் வீரசேகரவிற்கு இல்லை’

ரிஷாட் பதியுதீன் பாராளுமன்றத்திற்கு வருவதை தடை செய்வதற்கு பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகரவிற்கு எந்தவிதமான அதிகாரமும் இல்லை என கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வேலுகுமார் தெரிவித்துள்ளார்.

இந்த செயற்பாடானது சட்டத்தை கையிலெடுத்து கொண்டு அராஜக அரசியலை அரசாங்கம் செய்து வருவதையே காட்டுகின்றது எனவும் அவர் கூறினார்.

கொழும்பில் எதிர் கட்சி தலைவரின் காரியாலயத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

ஒரு பாராளுமன்ற உறுப்பினர் என்ற வகையில் முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் பாராளுமன்றத்திற்கு வந்து செல்வதற்கும் பாராளுமன்ற நடவடிக்கைகளில் கலந்து கொள்வதற்கும் முழுமையான உரிமை இருக்கின்றது.

அவர் ஒரு குற்றவாளியாக இதுவரை இனம் காணப்படவில்லை. எனவே பொது மக்களினால் தெரிவு செய்யப்பட்டுள்ள ரிஷாட் பதியுதீன் பாராளுமன்றத்திற்கு வருவதற்கும்  எந்தவிதமான சட்ட சிக்கலும் இல்லை எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

அவரை பாராளுமன்றம் அழைத்து வர வேண்டுமாக இருந்தால் சபாநாயகரின் கையெழுத்திடப்பட்ட ஆவணம் தேவை என முதலில் கூறினார்கள். ஆனால் நேற்று மாலை ரிஷாட் பதியுதீனுக்கு பி.சி.ஆர் பரிசோதனை செய்யப்பட்டிருப்பதாகவும் அதன் முடிவுகள் இதுவரை கிடைக்கவில்லை எனவும் இன்னுமொரு காரணம் குறிப்பிடப்பட்டது.

அதேவேளை, பாராளுமன்றத்தில் பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தனது வேண்டுகோளின்பேரில் ரிசாட் பதியுதீனை பாராளுமன்றத்திற்கு அழைத்து வர வேண்டாம் என்றும் அது விசாரணைக்கு இடையூறாக அமையும் எனவும் தெரிவித்துள்ளார்.

இவை முன்னுக்கு பின் முரணான கருத்தாகவே இருக்கின்றது. இந்த விடயத்தின் மூலம் சிறுபான்மை பாராளுமன்ற உறுப்பினர்களை அச்சுறுத்தி தங்களுடைய தேவைகளை நிறைவேற்றிக் கொள்ள அரசாங்கம் திட்டமிடுகின்றமையே தெளிவாகின்றது. இது ஜனநாயக நாடா? அல்லது இராணுவ ஆட்சி நடைபெறுகின்ற நாடா? என்ற கேள்வி எழுகின்றது என்றார்.

அரசாங்கத்திற்கு எதிராக கருத்து தெரிவிக்கின்றவர்களின் குரல் வளையை நசுக்குவதற்கு அரசாங்கம் திட்டமிட்ட அடிப்படையில் செயற்பட்டு வருகின்றது. இதன் ஒரு கட்டமாகவே  பாராளுமன்ற உறுப்பினர் ஹரீன் பெர்னாண்டோவையும் கைது செய்வதற்கு திட்டமிட்டு வருகின்றது.

இவையெல்லாம் அராஜக அரசியலின் வெளிப்பாடாகும்.அரசாங்கத்தின் திட்டம் என்னவென்றால் எங்களுடைய முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவை போன்று ரிஷாட் பதியுதீனுடைய பாராளுமன்ற உறுப்புரிமையையும் இல்லாது செய்ய வேண்டும் என்ற நோக்கத்திலேயே அரசாங்கம் செயற்படுகின்றது.

எந்த காரணம் கொண்டும் எதிர்கட்சிகளின் குரல் வளையை நெருக்கியோ அல்லது எங்களை அச்சுறுத்தியோ எங்களுடைய செயற்பாடுகளுக்கு முட்டுக்கட்டை போட முடியாது என்பதை அரசாங்கம் புரிந்து கொள்ள வேண்டும் எனவும் அவர் இதன்போது தெரிவித்தார்.