October 5, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

வடக்கு மாகாணத்தில் மேலும் 43 பேருக்கு கொரோனா தொற்று

யாழ்.மாவட்டத்தில் 37 பேர் உட்பட வடக்கு மாகாணத்தில் மேலும் 43 பேருக்கு கொரோனா தொற்று உள்ளமை செவ்வாய்க்கிழமை கண்டறியப்பட்டுள்ளது என்று மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.

வடக்கின் நிலைமைகள் தொடர்பில் ஊடகவியலாளர்களுக்கு விளக்கமளிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்;

யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மருத்துவ பீடம், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை ஆகிய இரண்டு ஆய்வு கூடங்களில் 824 பேரின் மாதிரிகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன.இதில் 43 பேருக்கு தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 37 பேருக்கும் கிளிநொச்சி, வவுனியா மாவட்டங்களில் தலா மூவருக்கும் என 43 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

கொடிகாமம் வர்த்தக தொகுதியில் வர்த்தகர்கள், பணியாளர்களிடம் முன்னெடுக்கப்பட்ட பரிசோதனையில் 21 பேருக்கு தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.கடந்த மூன்று நாட்களில் 30 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

உடுவில் சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் இருவர் அடையாளம் காணப்பட்டுள்ள அதேவேளை, யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் 8 பேருக்கு தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை தனிமைப்படுத்தல் விடுதியில் சிகிச்சை பெற்ற 6 பேருக்கு தொற்றுள்ளதாக அறிக்கையிடப்பட்டுள்ளது.

அதேபோல்,வவுனியா பூவரசங்குளம் ஆதார வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட இருவருக்கு கொரோனா தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

வவுனியா சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் சுயதனிமைப்படுத்தலில் இருந்த ஒருவருக்கு தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலை தனிமைப்படுத்தல் விடுதியில் கண்காணிக்கப்பட்ட மூவருக்கு தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது என்றும் வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.