July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘கொரோனா தொடர்பில் அரசாங்கம் அக்கறை செலுத்தாமல் விமான கொள்வனவில் கவனம் செலுத்துகின்றது’

மக்கள் கொரோனா தொற்றால் அவதிப்படும் நிலையில் அரசாங்கம் ரஷ்யாவிலிருந்து விமானங்களை கொள்வனவு செய்ய அவசரப்படுவதாக நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வே. இராதாகிருஷ்ணன் குற்றம் சாட்டியுள்ளார்.

நுவரெலியா – கொத்மலை ரம்பொட ஆஞ்சநேயர் ஆலயத்தில் மே தினத்தை முன்னிட்டு இடம்பெற்ற விசேட வழிபாடுகளின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதன்போது,’நாட்டில் கொரோனா தாண்டவம் ஆடி கொண்டிருக்கும் போது அரசாங்கம் ரஷ்யாவில் இருந்து 4 ஹெலிகொப்டர்களை அதிக பணம் கொடுத்து கொள்வனவு செய்ய முயற்சிப்பதாகவும் முதலில் மக்களுக்கு தடுப்பூசிகளை பெற்று கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் அவர் இதன்போது குறிப்பிட்டுள்ளார்.

மேலும் கொவிட் தொற்று தொடர்பில் அக்கறை செலுத்தாமல் விமான கொள்வனவு குறித்து கவனம் செலுத்துகின்றனர். இதனை அநாவசிய செலவாக கருதாவிடினும் தற்போதைய நிலையில் அதற்கு முன்னுரிமை வழங்குவது உசிதமற்றது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஆகவே தேவையான விடயத்துக்கு முதலிடம் கொடுத்து செயற்பட வேண்டும். அரசாங்கம் இவ்வாறு திட்டமிட்டு செயற்படாததால்தான் கொரோனா தொற்று அதிகரிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

தற்போது கொழும்பு துறைமுக நகர திட்டம் தொடர்பான விவாதத்தை ஒரே நாளில் நடத்தி அதை நிறைவேற்றிக்கொள்ள அரசாங்கம் எதிர்பார்க்கின்றது எனவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

இதேவேளை, எதிர்க்கட்சிகளை புறக்கணித்து இவ்வாறு ஜனநாயக விரோத செயற்பாட்டில் இறங்கியுள்ளமையானது புரியாத புதிராகும்.

இருபதாவது திருத்தத்தை ஆதரித்து ஜனாதிபதிக்கு மேலும் அதிகாரங்களை வழங்கிய சிறுபான்மை உறுப்பினர்களின் நிலைமை கவலைக்கிடமாகவுள்ளது எனவும் இராதாகிருஷ்ணன் மேலும் தெரிவித்துள்ளார்.