June 2, 2025 19:19:30

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

சூட்சுமமான முறையில் விமான நிலையத்தில் தங்கக் கடத்தல்: கண்டுபிடித்த சுங்க அதிகாரிகள்

வெளிநாடுகளிலிருந்து சூட்சுமமான முறையில் இலங்கைக்கு தங்கம் கடத்தும் முறையொன்றை கட்டுநாயக்க விமான நிலையத்தின் சுங்கப் பிரிவினர் கண்டுபிடித்துள்ளனர்.

இதன்படி நாட்டுக்கு கடத்திவரப்பட்ட பெருமளவு தங்கம் விமான நிலையத்தில் வைத்து சுங்கப் பிரிவினரால் இன்று மீட்கப்பட்டுள்ளது.

கட்டாரில் இருந்து இன்று முற்பகல் வந்த விமானத்தில் வந்திறங்கிய பயணியொருவர் விமான நிலையத்தில் உள்ள மலசலக்கூடத்திற்குள் வைத்து விமான நிலைய சுத்திகரிப்பு பணியாளர் ஒருவரிடம் தங்கத்தை கையளிப்பது சுங்க அதிகாரிகளினால் இரகசியமாக அவதானிக்கப்பட்டுள்ளது.

பின்னர் குறித்த சுத்திகரிப்பு பணியாளர் அந்த தங்கத்தை தனது உடலுக்குள் மறைத்து விமான நிலையத்திற்கு வெளியே செல்ல தயாராக இருந்த நிலையில் தங்கத்தை மீட்டுள்ள அதிகாரிகள் அதனுடன் தொடர்புடைய இருவரையும் கைது செய்துள்ளதாக சுங்க திணைக்களத்தின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

இவ்வாறாக 26 கிலோ நிறையுடைய தங்கக் கட்டிகளும், நகைகளும் மீட்கப்பட்டுள்ளதாகவும், இதன் பெறுமதி 317 மில்லியன் ரூபா எனவும் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.