July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

நீண்ட போராட்டங்களைத் தொடர்ந்து வட மாகாண சுகாதார தொண்டர்களுக்கு நியமனம் வழங்க ஏற்பாடு

FilePhoto

வட மாகாண சுகாதார தொண்டர்களுக்கு எதிர்வரும் திங்கட்கிழமை நியமனக் கடிதம் வழங்கப்படவுள்ளதாக சுகாதார தொண்டர்கள் தெரிவித்துள்ளனர்.

ஆளுநர் செயலகத்தின் முன்பாக இடம்பெற்றுவரும் வரும் தொடர் போராட்டத்தில் ஈடுபடுவோர் இன்றையதினம் நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துதெரிவித்தனர்.

இதன்போது, எதிர்வரும் திங்கட்கிழமை வட மாகாண ஆளுநர் செயலகத்தினூடாக நியமனம் வழங்கப்படவுள்ளதாக ஜனாதிபதியின் செயலாளரினால் உறுதியளிக்கப்பட்டதாக தெரிவித்தனர்.

வடக்கு வைத்தியசாலைகளில் சுகாதார தொண்டர்களாக பணியாற்றியவர்களுக்கு மாகாண சுகாதார அமைச்சினால் நிரந்தர நியமனம் வழங்கி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்ட போது, ஏற்பட்ட குழப்பத்தின் காரணமாக நியமனம் இடைநிறுத்தப்பட்டது.

அதில் தெரிவு செய்யப்பட்டவர்களுக்கு நியமனக் கடிதங்கள் கிடைத்திருந்த நிலையில், 2019 ஜனாதிபதித் தேர்தலின் பின்னான ஆட்சி மாற்றத்தையடுத்து, நிதி அமைச்சின் செயலாளரின் பணிப்பில் அனைத்து புதிய நியமனங்களும் இடைநிறுத்தப்பட்டன.

இந்த நிலையில் தமக்கான நிரந்தர நியமனத்தை இடைநிறுத்தி அநீதி இழைக்கப்படுவதாக பாதிக்கப்பட்ட சுகாதார தொண்டர்கள் தெரிவித்ததுடன், வடமாகாண ஆளுநரின் செயலகம் முன்பாக இரண்டு மாதங்களாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையிலேயே, அண்மையில் ஜனாதிபதி செயலகத்தில் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவர்களுடனான கலந்துரையாடலில் கருத்துரைத்த யாழ்ப்பாணம் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவர் அங்கஜன் இராமநாமன்,

‘வட மாகாண சுகாதார தொண்டர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்கப்படும் எனத் தெரிவித்துவிட்டு, அதனை செய்யாது தொடர்ச்சியாக ஏமாற்றப்படுகிறார். அவர்களுக்கான நிரந்தர நியமனத்தை உறுதி செய்யவேண்டும்.

அண்மையில் யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்த அமைச்சர் மகிந்தானந்த அளுத்கமகே, விடயத்தை அமைச்சரவைக்குக் கொண்டு செல்வதாக உறுதியளித்திருந்தார்.

சுகாதார தொண்டர்களாக சேவையாற்றுவோரை ஒரு இலட்சம் இளையோருக்கு அரச தொழில் வழங்கும் திட்டத்துக்கு உள்ளீர்த்து, நிரந்தர நியமனம் வழங்குவதாக ஜனாதிபதி உறுதியளித்திருந்தார்.

இந்நிலையில், வடக்கு மாகாணத்தில் சுகாதார தொண்டர்களாக சேவையாற்றும் 388 பேரை ஒரு லட்சம் இளையோருக்கு அரச தொழில் வழங்கும் திட்டத்துக்கு உள்ளீர்த்து, நிரந்தர நியமனம் வழங்குமாறு பல்நோக்கு செயலணி திணைக்களத்துக்கு ஜனாதிபதி செயலகத்தால் பணிக்கப்பட்டுள்ளது.