July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

“முள்ளிவாய்க்காலில் உயிரிழந்தோரை நினைவு கூர அரசாங்கம் அனுமதி வழங்க வேண்டும்”

இறுதிக்கட்ட யுத்தத்தின் போது முள்ளிவாய்க்காலில் உயிரிழந்தோரை நினைவு கூருவதற்கு அரசாங்கம் அனுமதி வழங்க வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் கோரிக்கை விடுத்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

யுத்தத்தின் போது இறந்த தமது உறவுகளை மே 18 ஆம் திகதி நினைவு கூர வேண்டும். ஆனால் அரசாங்கம் அதற்கு தடை விதிக்க முயற்சிக்கின்றது என்று சிறீதரன்  குறிப்பிட்டுள்ளார்.

உயிரிழந்தோரை நினைவு கூர்ந்து வணக்கம் செலுத்த அனுமதி வழங்குவதன் மூலமே அரசாங்கத்தினரை தங்களை மனிதர்களாக அடையாளப்படுத்த முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஈஸ்டர் தாக்குதலில் உயிரிழந்தோருக்கு நினைவு கூருவதற்கு அனுமதி வழங்கப்படுகின்றது. அதேபோன்று முள்ளிவாய்க்காலில் இறந்தவர்களை நினைவு கூரவும் அனுமதிக்க வேண்டும் என்று சிறீதரன் எம்.பி  தெரிவித்தார்.