July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இலங்கையில் முதன் முறையாக ஒரே நாளில் 1000 க்கும் அதிகமானோருக்கு கொரோனா தொற்று உறுதி

இலங்கையில் ஒரே நாளில் (செவ்வாய்க்கிழமை) 1096 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக ராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.

நாட்டில் முதலாவது கொரோனா தொற்றாளர் அடையாளம் காணப்பட்டது முதல் ஒரே நாளில் 1000 க்கும் அதிகமான தொற்றாளர்கள் இனங்காணப்பட்ட முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும்.

இந்நிலையில், இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 103,472 ஆக உயர்வடைந்துள்ளது.

இதனிடையே நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளான மேலும் 276 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதையடுத்து கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவர்களில் மொத்த எண்ணிக்கை 94,856 ஆக அதிகரித்துள்ளது.

இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 647 ஆக அதிகரித்தது.

இதேவேளை, ஒக்ஸ்போர்ட் அஸ்ட்ரா செனிகா தடுப்பூசியின் 2 ஆவது டோஸ் புதன்கிழமை முதல் சுகாதாரப் பிரிவினருக்கு வழங்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக மருந்து விநியோகம் மற்றும் ஒழுங்குபடுத்தல் இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.