May 31, 2025 16:52:22

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இலங்கையில் தீவிரம் அடையும் புதிய வைரஸ்; 2 மீட்டர் சமூக இடைவெளியைப் பேணுமாறு அறிவுறுத்தல்

தற்போது இலங்கையில் வேகமாக பரவி வரும் வைரஸ் குறித்த உறுதியான ஆய்வு முடிவுகள் வெளியாகும் வரை இரண்டு மீட்டர் சமூக இடைவெளியை பேணுமாறு பொது மக்களுக்கு ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் நோயெதிர்ப்பியல் மற்றும் மூலக்கூறு மருத்துவ திணைக்களத்தின் பணிப்பாளர் கலாநிதி சந்திம ஜீவந்திர அறிவுறுத்தியுள்ளார்.

இந்தியாவில் பரவல் அடைந்துவரும் கொரோனா வைரஸின் மாறுபாடு இலங்கையில் பரவி வருகிறது என்பதற்கு இதுவரை எந்தவிதமான உறுதியான ஆதாரங்களும் இல்லை என தெரிவித்துள்ள அவர், இந்த புதிய வைரஸ் குறித்து முழு மரபணு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டதன் பின் அடுத்த வாரம் சரியாக கூற முடியும் என்றார்.

இந்தியாவில் பரவல் அடைந்துவரும் வைரஸ் இலங்கைக்குள் பரவ வாய்ப்புள்ள போதிலும் இதற்கான சாத்தியக்கூறுகளை  குறைக்க சுகாதார அதிகாரிகள் அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

இதேநேரம் இந்த வைரஸ் நாட்டில் ஏற்கனவே பரவி வரும் வைரஸின் புதிய மாறுபாடாக கூட இருக்கலாம் என பரிசோதனைகள் காட்டுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

பண்டிகை காலத்திற்குப் பிறகு கொழும்பு, குருநாகல் மற்றும் கண்டி பகுதிகளிலிருந்து பெறப்பட்ட கொரோனா தொற்று மாதிரிகளில் இது போன்ற பிறழ்வை அவதானிக்க முடிந்ததாகவும் கலாநிதி சந்திம ஜீவந்திர சுட்டிக்காட்டினார்.

எவ்வாறாயினும் மக்கள் சுகாதார வழிகாட்டுதல்களைக் கண்டிப்பாக பின்பற்றுவதன் மூலம் வைரஸ் நாட்டில் மேலும் பரவுவதைத் தடுக்க முடியும் என்று அவர் கூறினார்.