
கரைச்சி பிரதேச சபையினை மூன்றாக பிரிப்பது தொடர்பான கலந்துரையாடல் இன்று கிளிநொச்சியில் இடம்பெற்றது.
குறித்த கலந்துரையாடல் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் தலைமையில் மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.
கரைச்சி பிரதேச சபையை கிளிநொச்சி நகர சபையாகவும், கரைச்சி மற்றும் கண்டாவளை பிரதேச சபைகளாகவும் பிரிப்பது தொடர்பில் மும்மொழிவு சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.
அதுதொடர்பான கலந்துரையாடலில் வடக்கு மாகாண உள்ளுராட்சி அமைச்சின் செயலாளர், வடமாகாண உள்ளுராட்சி ஆணையாளர், கரைச்சி, கண்டாவளை, பூநகரி, பச்சிலைப்பள்ளி பிரதேச செயலாளர்கள், பிரதேச சபை தவிசாளர்கள் மற்றம் செயலாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இதுவரை காலமும் கரைச்சி, கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுகள் கரைச்சி பிரதேச சபையின் ஆளுகையின் கீழ் இருந்தன.
தற்போது கிளிநொச்சி நகரை மையப்படுத்திய வகையில் நகர சபையாகவும், கண்டாவளை மற்றும் கரைச்சி பிரதேச சபைகளை தனித்தனியாக உருவாக்குவது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளன.
அதற்கமைவாகவே, இன்றைய கலந்துரையாடல் இடம்பெற்ற நிலையில், எதிர்வரும் 30 ஆம் திகதிக்கு முன்பதாக பொதுமக்களின் கருத்துக்களை உள்ளடக்கிய கள ஆய்வினை சமர்ப்பிக்குமாறு மாவட்ட அரசாங்க அதிபர் பணிப்புரை விடுத்துள்ளார்.