July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இலங்கையில் புர்கா உட்பட முகத்தை மறைக்கும் அனைத்து ஆடைகளையும் தடை செய்ய அமைச்சரவை அனுமதி!

சுகாதார வழிகாட்டல்களுக்கு அமைவான முகக்கவசங்களை தவிர்ந்த புர்கா உள்ளிட்ட அனைத்து விதமான முகத்தை மறைக்கும் ஆடைகளையும் தடை செய்தவற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர இதனைத் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவின் தலைமையில் இன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இதன்படி, தேசிய பாதுகாப்பை கருத்திற்கொண்டு புர்கா மற்றும் நிகாப் ஆகியவற்றை தடை செய்ய முடிவு எடுக்கப்பட்டதாக அமைச்சர் சரத் வீரசேகர கூறியுள்ளார்.

கடந்த மார்ச் மாதம் பாராளுமன்றத்தில் ஈஸ்டர் குண்டுத் தாக்குதல்கள் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை மீதான விவாதத்தின் போது, அமைச்சர் சரத் வீரசேகர புர்காவிற்கு தடை விதிக்கப்படும் என அறிவித்திருந்தார்.

அதனைத் தொடர்ந்து குறித்த விவகாரம் பெரும் சர்ச்சை ஏற்படுத்தியிருந்த நிலையில், சம்பந்தப்பட்ட தரப்பினருடன் முறையான ஆலோசனை மேற்கொண்ட பின்னரே முடிவு எடுக்கப்படும் என அரசாங்கம் அறிவித்திருந்தது.