
போதைப்பொருள் பாவனையின் பின் வாகனங்களை செலுத்தும் ஓட்டுநர்களை கண்டுபிடிப்பதற்காக உலகளவில் கையாளப்படும் நவீன உபகரணங்களை கொள்வனவு செய்ய பொது பாதுகாப்பு அமைச்சு திட்டமிட்டுள்ளதாக பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.
போதையில் வாகனங்களை செலுத்துபவர்கள் தொடர்பில் அன்மையில் இடம்பெற்ற சிறப்புக் கூட்டத்தில் இது குறித்து கலந்துரையாடப்பட்டதாக அவர் கூறினார்.
குடிபோதை மற்றும் போதைக்கு அடிமையான ஓட்டுநர்களைக் கைது செய்வதற்காக நாடு முழுவதும் சிறப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வது குறித்தும் இதன் போது ஆலோசிக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.
குடிபோதையில் அல்லது போதை மருந்து உட்கொண்டதன் பின் வாகனம் ஓட்டுபவர்களுக்கு நீதிமன்றத்தால் ரூ .25,000 அபராதம் விதிக்கப்படுவதுடன் கூடுதலாக, நீதிமன்றத்தினால் சிறைத்தண்டனை விதிக்க முடியும் எனவும் பிரதி பொலிஸ் மா அதிபர் கூறினார்.
அத்தோடு ஓட்டுநர் உரிமத்தை நீதிமன்றம் ரத்து செய்யவோ அல்லது இடைநிறுத்தி வைக்கவோ முடியும் என்று அவர் குறிப்பிட்டார்.