July 8, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

“பல்கலைக்கழகங்கள் 27 ஆம் திகதி திறக்கப்பட மாட்டாது”: கல்வி அமைச்சர்

நாட்டில் உள்ள அனைத்து பல்கலைக்கழகங்களும் எதிர்வரும் 27 ஆம் திகதி திறக்கப்பட மாட்டாது என கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்தார்.

இன்று காலை பாராளுமன்றத்தில் வைத்து அவர் இதனை தெரிவித்தார்.

இதுதொடர்பில் அவர் பாராளுமன்றத்தில் உரையாற்றுகையில், “நாட்டிலுள்ள அனைத்து பல்கலைக்கழகங்களையும் எதிர்வரும் 27 ஆம் திகதி திறப்பதற்கு நாங்கள் தீர்மானித்திருந்தோம்.

எனினும், நாட்டில் கடந்த சில தினங்களாக மீண்டும் கொவிட் தொற்று பரவல் தீவிரமடைந்துள்ள நிலையில், பல்கலைக்கழகங்களை மீளத் திறப்பதை இன்னும் இரண்டு வாரங்களுக்கு ஒத்திவைக்கும் படி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் எங்களுக்கு இன்று காலை ஆலோசனை வழங்கினார்.”

இதன்படி, எதிர்வரும் திங்கட்கிழமை ஆரம்பிப்பதற்கு திட்டமிடப்பட்டிருந்த அனைத்து பல்கலைக்கழகங்களும் திறக்கப்பட மாட்டாது என அவர் தெரிவித்தார்.

அத்துடன்,  விடுதிகளை மீண்டும் திறப்பது தொடர்பில் தற்போது காணப்படும் பிரச்சினைகளை கருத்தில்கொண்டு முதல் கட்டமாக மூன்றாம் மற்றும் நான்காம் ஆண்டு மாணவர்களுக்கு மாத்திரம் அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.

மேலும், முதலாம் மற்றும் இரண்டாம் ஆண்டு மாணவர்களை பல்கலைக்கழகங்களுக்குள் அனுமதிப்பது தொடர்பில்  பின்னர் அறிவிக்கப்படுமெனவும் கல்வி அமைச்சர் தெரிவித்திருந்தார்.

எனினும், நாட்டில் கடந்த இரு மாதங்களின் பின்னர் மீண்டும் கொவிட் தொற்று பரவல் தீவிரமடைந்துள்ள நிலையில், பல்கலைக்கழகங்களை மீளத் திறப்பதை இரண்டு வாரங்களினால் பிற்போடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.