
வெலிக்கடை சிறைச்சாலை, மகசின் சிறைச்சாலை, வெலிக்கடை பெண் பிரிவு மற்றும் சிறை மருத்துவமனை ஆகியவற்றில் சிசிடிவி கமராக்களை பொருத்தும் நடவடிக்கை ஆரம்பமாகியுள்ளதாக சிறைச்சாலை செய்தித் தொடர்பாளர் சந்தன ஏக்கநாயக்க தெரிவித்தார்.
அதேபோல்,களுத்துறை,மஹர மற்றும் நீர்கொழும்பு சிறைச்சாலைகளிலும் சிசிடிவி கமராக்கள் பொருத்தப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
‘கைதிகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும், சிறைகளுக்கு உள்ளேயும் வெளியேயும் நடக்கும் வன்முறை,மற்றும் சட்டவிரோத செயல்களைத் தடுக்கும் நோக்கிலேயே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இந்த திட்டம் எதிர்வரும் ஆகஸ்ட் மாத இறுதிக்குள் நிறைவடையும் என தெரிவித்துள்ள சந்தன ஏக்கநாயக்க,ஏற்கனவே அகுனுகொலபெலெஸ மற்றும் பொஸ்ஸ சிறைகளில் சிசிடிவி கமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன எனவும் தெரிவித்தார்.
சிறைச்சாலைகளுக்குள் தொலைபேசிகள் மற்றும் சட்டவிரோத பொருட்கள் கொண்டு வரப்படும் செயற்பாடுகள் அதிகமாக இடம்பெற்றுவருகிறது என்று தெரிவித்த அவர்,எவ்வாறாயினும், இவ்வாறான செயற்பாடுகளை முடிந்தவரை கட்டுப்படுத்தியிருக்கிறோம்.
மேலும்,இந்த கமராக்களை பொருத்துவதனூடாக சட்டவிரோத நடவடிக்கைகளை முழுமையாக தடுக்க முடியும் என எதிர்பார்க்கிறோம் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.