July 8, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘கல்முனை தமிழ் பிரதேச செயலகம் தரமிறக்கப்பட்டது ஏன்?’; கஜேந்திரகுமார் கேள்வி

கல்முனை தமிழ் பிரதேச செயலகம் தரமிறக்கப்பட்டு உப பிரதேச செயலகமாக அறிவிக்கப்பட்டுள்ளதை ஏற்க முடியாதென தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் யாழ் மாவட்ட எம்.பி.யுமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் உரையாற்றிய அவர், தமிழ் மக்கள் இப்பிரதேசத்தில் வாழ்கின்ற காரணத்தினாலா இவ்வாறு பாகுபாடு பார்க்கப்படுகின்றது எனவும் கேள்வி எழுப்பினார்.

கல்முனை தமிழ் பிரதேச செயலகத்தை உப பிரதேச செயலகமாக தரமிறக்குமாறு பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சினால் அம்பாறை மாவட்ட அரச அதிபருக்கு ஏப்ரல் 8 ஆம் திகதியிடப்பட்டு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

கடந்த 28 வருடங்களாக கல்முனை தமிழ் பிரதேச செயலகமாக இது செயற்பட்டு வருகின்றது.

இங்கு 39 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வாழ்கிறார்கள். இவர்களில் 3000 வரையிலான முஸ்லிம்களும் 104 சிங்களவர்களும் உள்ளனர். வாக்காளர்களாக 22,500க்கும் மேற்பட்டவர்கள் உள்ளனர் என்றார்.

பிறப்பு, இறப்பு, விவாகப்பதிவாளர் அலுவலகம், காணி அலுவலகம் என்பவற்றினால் இது ஒரு தனி பிரதேச செயலகமாகவே அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இதற்கென தனியாக நிதி ஒதுக்கீடுகளும் வழங்கப்படுகின்றன எனவும் குறிப்பிட்டார்.

வர்த்தமானியில் பிரசுரிக்கப்படாத பல பிரதேச செயலகங்கள் உள்ளன. மட்டக்களப்பு, வவுனியாப்பகுதிகளில் இவை உள்ளன. இவ்வாறான நிலையில் கல்முனை தமிழ் பிரதேச செயலகத்தில் மட்டும் ஏன் பாரபட்சம் காட்டுகின்றீர்கள்? தமிழ் மக்களை உள்ளடக்கிய பிரதேச செயலகமாக இருப்பதுதான் காரணமா? என வினவினார்.

கல்முனை தமிழ் பிரதேச செயலகம் பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சினால் தரமிறக்கப்பட்ட விடயத்தை அவசர நிலையாக கருதி இதனை மீள் பரிசீலனை செய்யுமாறு எம்.பி கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கோரினார்.

இவ்விடயம் தனியாக கையாளப்பட வேண்டும் என்பதுடன், இதனை தனி பிரதேச செயலகமாக செயற்பட அனுமதிக்க வேண்டும் என்றார்.

இவ்விடயம் தொடர்பில் பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சரின் கவனத்துக்கு கொண்டு செல்லுமாறு அரச தரப்பினரிடம் கேட்டுக்கொண்டார்.