July 4, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

கொழும்பில் இதுவரை கொரோனா நோயாளிகள் கண்டறியப்படவில்லை -சுகாதார அமைச்சு

மினுவாங்கொட தொழிற்சாலையில் ஏற்பட்டுள்ள கொரோனா கொத்தணியுடன் (Cluster) தொடர்புடைய நோயாளிகள் எவரும் இதுவரை கொழும்பில் கண்டறியப்படவில்லை என்று சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

தொற்றுநோயியல் விஞ்ஞானப்பிரிவின் பணிப்பாளர் டாக்டர் சுதத் சமரவீர கூறுகையில்;

“கொத்தணிக்கு வெளியே இருந்து யாழ்ப்பாணம், மொனராகல, மாத்தளை, குருநாகல மற்றும் கம்பாஹா பகுதிகளில் நோயாளிகள் பதிவாகியுள்ளனர்.

இப்பகுதியில் உள்ள ஒரு ஆடை தொழிற்சாலையின் பல தொழிலாளர்கள் வைரஸுடன் கண்டறியப்பட்டதையடுத்து மினுவாங்கொட கொவிட் -19 கொத்தணி வெளிப்பட்டது.

கடந்த சில தினங்களுக்கு முன்னர் கம்பஹா வைத்தியசாலையில் அடையாளம் காணப்பட்ட பெண், முதலாவதாக தொற்றுக்குள்ளான பெண் அல்ல என அவர் தெரிவித்துள்ளார்.

இந்த பெண்ணுக்கு செப்டெம்பர் மாதம் 28ஆம் திகதியே நோய் அறிகுறிகள் ஏற்பட்டதுடன் அவர் கம்பஹா வைத்தியசாலையில் சிகிச்சை பெறுவதற்காக செப்டெம்பர் மாதம் 30ஆம் திகதி அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தொழிற்சாலை ஊழியர்களின் தகவல் பெறும் போது செப்டெம்பர் மாதம் 20ஆம் திகதியில் இருந்து பலருக்கு காய்ச்சல் மற்றும் சுவாசப் பிரச்சினைகள் ஏற்பட்டிருந்ததாக தெரியவந்துள்ளது.

தற்போதைய நிலைமை தொடர்பில் சுகாதார பிரிவிடம் தெளிவுப்படுத்தினோம். தொழிற்சாலைக்கு வெளிநாட்டவர்கள் வந்தமைக்கான சாட்சிகள் இன்னமும் கிடைக்கவில்லை.

எங்கிருந்து இவர்களுக்கு வைரஸ் தொற்றியதென கண்டுபிடித்து விட்டால் நல்லது. அவ்வாறு இல்லை என்றாலும் எங்களால் நோயை கட்டுப்படுத்த கூடிய வல்லமை உள்ளது என வைத்தியர் சுதத் சமரவீர மேலும் தெரிவித்துள்ளார்.