October 5, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

வடக்கிற்கான வீட்டுத்திட்டம் 2021 இல் பூர்த்தியாகும் – பிரதமர்

வடக்கு மாகாணத்திற்கான 6682 வீடுகளை கொண்ட வீட்டுத்திட்டம் 2021 ஆம் ஆண்டில் பூர்த்தியாகும் என்று பிரதமர் மஹிந்த ராஜபக்க்ஷ வாக்குறுதியளித்தார்.

பாராளுமன்றத்தில் இன்று பிரதமரிடத்திலான கேள்வி நேரத்தின் போது, சார்ள்ஸ் நிர்மலநாதன் எம்.பியினால் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதில் கூறுகையிலே பிரதமர் இதனைத் தெரிவித்துள்ளார்.

கடந்த ஆட்சியில் முன்னெடுக்கப்பட்ட வீட்டுத் திட்டத்தில் வடக்கில் மன்னார், வவுனியா, முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களில் 2987.53 மில்லியன் ரூபா செலவில் 6682 வீடுகளை நிர்மாணிக்க தீர்மானிக்கப்பட்ட போதும் அது இடை நடுவே கைவிடப்பட்டது.

இவ்வாறாக கைவிடப்பட்ட வீட்டுத்திட்டத்தை புதிய அரசாங்கம் முன்னெடுக்குமா? என்று சார்ள்ஸ் சபையில் கேள்வி எழுப்பினார்.

இதற்கு பிரதமர் பதில் கூறுகையில், இந்த திட்டத்தை முன்னெடுப்பதற்கு காலதாமதம் ஏற்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.

மேலும், 2018 ஆம் ஆண்டில் வீடுகளுக்கு ஒதுக்கப்பட்ட நிதி 2019 ஆம் ஆண்டுக்கும், 2019 ஆம் ஆண்டுக்கு ஒதுக்கப்பட்ட நிதி 2020 ஆம் ஆண்டுக்கும் என்ற அடிப்படையில் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், இதன்படி இந்த வேலைத்திட்டம் 2021 ஆம் ஆண்டில் முழுமையாக பூர்த்தியாகும் என்றும் தெரிவித்தார்.