June 13, 2025 14:53:54

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

வடக்கு, கிழக்கில் அன்னை பூபதியின் 33 ஆம் ஆண்டு நினைவு நாள் நிகழ்வுகள்

இலங்கையில் இருந்து இந்திய இராணுவத்தை வெளியேற்றக் கோரி உண்ணாவிரத போராட்டம் இருந்து மரணித்த அன்னை பூபதியின் 33 ஆவது நினைவு தின நிகழ்வுகள் இன்று வடக்கு, கிழக்கு மாகாணங்களில் இடம்பெற்றன.

இதன்படி யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் பல்கலைக்கழக வளாகத்தில் இன்று காலை நினைவஞ்சலி நிகழ்வு நடத்தப்பட்டது.

பூபதியின் உருவப்படத்திற்கு மலர் தூபி, மெழுகுவர்த்தி ஏற்றி மாணவர்கள் அஞ்சலி செலுத்தினர்.

இதேவேளை வவுனியாவில் கடந்த 1520 நாட்களாக சுழற்சிமுறை உணவுத்தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வரும் காணாமல் போனவர்களின் உறவினர்களாலும் அன்னை பூபதிக்கு அஞ்சலி நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

அத்துடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரின் ஏற்பாட்டில் கல்லடி நாவலடியில் உள்ள, அன்னை பூபதியின் சமாதிக்கு அருகில் நினைவஞ்சலி நிகழ்வு நடத்தப்பட்டது.

1932 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 3ஆம் திகதி பிறந்த அன்னை பூபதி, இலங்கையில் நிலைகொண்டிருந்த இந்திய இராணுவத்தினரை வெளியேற்ற வலியுறுத்தி 1988 மார்ச் 19ஆம் திகதி மட்டக்களப்பு அமிர்தகழி மாமாங்கேஸ்வர் ஆலயத்திற்கு முன்பாக நீர் மட்டும் அருந்தி சாகும் வரை உண்ணாவிரத போராட்டத்தை முன்னெடுத்தார்.

அவரது கோரிக்கைகள் எதுவும் ஏற்றுக்கொள்ளபடாத நிலையில் போராட்டத்தை ஆரம்பித்து 31ஆவது நாளான 1988ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 19ஆம் திகதி அவர் மரணித்தார்.