![](https://i0.wp.com/tamilavani.com/wp-content/uploads/2021/01/WhatsApp-Image-2020-12-23-at-1.10.07-PM.jpeg?fit=1024%2C673&ssl=1)
அரசாங்கத்தினால் பாராளுமன்றத்தில் சமர்பிக்கப்பட்டுள்ள கொழும்பு துறைமுக நகரத்தின் ‘விசேட பொருளாதார வலய ஆணைக்குழு’ சட்டமூலத்திற்கு எதிரான 19 மனுக்கள் மீதான பரிசீலனை இன்று காலை முதல் ஆரம்பமாகியுள்ளது.
பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய தலைமையிலாக புவனேக அலுவிகாரே, பிரியந்த ஜயவர்தன, மூர்து பெர்ணாண்டோ மற்றும் ஜனக் டி சில்வா ஆகிய ஐவரடங்கிய நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் மனுக்கள் பரிசீலிக்கப்பட்டு வருகின்றன.
குறித்த சட்டமூலம் நாட்டின் இறைமைக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளதாக குறிப்பிட்டு ஐக்கிய தேசியக் கட்சி, ஐக்கிய மக்கள் சக்தி, ஜே.வி.பி, இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் உள்ளிட்ட 19 தரப்பினரால் உயர்நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
குறித்த சட்டமூலத்தை பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட வேண்டும் என்பதுடன், அது தொடர்பில் சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்றும் அதற்கான உத்தரவை பிறப்பிக்குமாறும் மனுதாரர்கள் நீதிமன்றத்தை கேட்டுக்கொண்டுள்ளனர்.
இதன்படி இந்த மனுக்கள் இன்று காலை முதல் நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் பரிசீலிக்ககப்படுவதுடன், அதன்பின்னர் மனுக்களை விசாரணைக்கு எடுத்துக்கொள்வதா? இல்லையா? என்பது தொடர்பாக நீதிமன்றத்தினால் அறிவிக்கப்படவுள்ளது.