July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

”இலங்கைக் கடலில் இந்திய மீனவர்களின் அத்துமீறலை முழுமையாக நிறுத்த வேண்டும்”: டக்ளஸ் தேவானந்தா

சர்வதேச நாடுகளினாலும் இலங்கையினாலும் தடைசெய்யப்பட்ட  தொழில் முறைமையை இந்தியக் கடற்றொழிலாளர்கள் மேற்கொள்வதை எவ்வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது என்று கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

தொலைக்காட்சி அரசியல் நிகழ்ச்சியொன்றில் இந்திய மீனவர் பிரச்சனை குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

கடல் வளத்தையும் எமது கடற்றொழிலாளர்களையும் பாதிக்கும் இந்திய மீனவர்களது எல்லைதாண்டும் அத்துமீறிய சட்டவிரோத கடற்றொழில் நடவடிக்கைகளை முழுமையாக நிறுத்த வேண்டும் என்பதே எனது நோக்கமாக உள்ளது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

குறிப்பாக இந்தியா உட்பட பல சர்வதேச நாடுகளினாலும் எமது நாட்டிலும் தடைசெய்யப்பட்ட ஒரு தொழில் முறைமையை இந்தியக் கடற்றொழிலாளர்கள் மேற்கொள்வதை எவ்வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் அமைச்சர் கூறியுள்ளார்.

ஆனாலும் இந்த விடயத்திற்கு தீர்வு காண்பதற்காக யோசனைகள் பலதரப்பினராலும் முன்வைக்கப்படுவதாகவும், அதில் ஒரு யோசனையே அனுமதிப்பத்திரம் வழங்கும் விடயம் என்று குறிப்பிட்டுள்ள அவர், இதை சிலர் தவறான பார்வையில் சித்தரிக்கின்றனர் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

அதேநேரம் எனக்கும் வடக்கு கடற்றொழிலாளர்களுக்கும் இடையே சிறந்த புரிந்துணர்வு உண்டு என தெரிவித்துள்ள அமைச்சர், தன்னால் எடுக்கவுள்ள முடிவுகள் பாதிக்கப்படுகின்ற கடற்றொழிலாளர்களினாலும் ஏற்றுக்கொள்ளக் கூடிய கருத்தாகவே இருக்கும் என்றும் அவர்களது விருப்புக்கு மாறானதாக அவை இருக்க மாட்டாது என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும் யுத்த காலகட்டத்தில் கடவுச் சீட்டின்றி இந்தியாவுக்கு சென்ற எமது மக்களை அந்நாட்டு அரசு தமிழக மக்களும் கௌரவமாக ஏற்றுக்கொண்டனர் எனவும், தற்போதைய பூகோள அரசியல் ரீதியில் இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான உறவு இரண்டு நாடுகளுக்கும் அவசியமானது என்றும் கூறியுள்ளார்.