
ஜெனிவா ஐநா மனித உரிமைகள் பேரவை உள்ளிட்ட சர்வதேச அரங்கில் இலங்கை எதிர்நோக்கக்கூடிய நெருக்கடி நிலைமைகளின் போது சீனா இலங்கைக்கு தொடர்ந்தும் கைகொடுத்து உதவும் என்று அங்கு சென்றுள்ள சீன தூதுக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
இலங்கைக்கு அதிகாரபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டுள்ள சீன கொமியுனிசக் கட்சியின் அரசியல் குழு உறுப்பினர் யாங் ஜியேச்சி தலைமையிலான சீன தூதுக்குழுவினர் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை இன்று சந்தித்து பேச்சு நடத்தினர்.
இருநாட்டு நட்புறவு, இலங்கையில் முன்னெடுக்கப்படும் அபிவிருத்தி வேலைத்திட்டங்கள், கொழும்பு துறைமுக நகரத் திட்டத்தின் அடுத்த கட்ட நகர்வுகள், தேசிய அரசியல் விவகாரங்கள் மற்றும் சர்வதேச அரங்கில் இலங்கை சந்திக்கும் நெருக்கடி நிலைமைகள் குறித்து இந்தப் பேச்சுக்களின் போது முக்கிய கவனம் செலுத்தப்பட்டிருந்தது.

இலங்கை சர்வதேச மட்டத்தில் எதிர்கொண்டு வருகின்ற நெருக்கடிகள் தொடர்பில் சீனாவின் நிலைப்பாட்டை தூதுக்குழுவினர் இதன்போது முன்வைத்துள்ளனர்.
குறிப்பாக, ஐநா மனித உரிமைகள் பேரவையில் இலங்கை எதிர்கொள்ளக் கூடிய நெருக்கடி நிலைமையின் போது இலங்கைக்கு உறுதுணையாக சீனா இருக்கும் என்று தூதுக்குழுவினர் உறுதியளித்துள்ளனர்.
சர்வதேச அரங்கில் இலங்கையின் இறையாண்மையையும் சுயாதீனத்தையும் பாதுகாக்க சீனா எப்போதுமே முன்னிற்கும் என்றும் அவர்கள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
இதனிடையே, யாங் ஜியேச்சி தலைமையிலான உயர்மட்டக் குழுவினர் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவையும் சந்தித்து பேச்சு நடத்தியுள்ளனர்.

கொவிட்-19 பரவலுக்கு எதிரான போராட்டத்திலும் பொருளாதார நடவடிக்கைகளிலும் சீனாவுடன் இணைந்து பணியாற்ற விரும்புவதாக இந்த சந்திப்பின் போது பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
மேலும், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ விரைவில் சீனாவுக்கான விஜயத்தை முன்னெடுக்க வேண்டும் என்றும் சீன தூதுக்குழுவினர் அழைப்பு விடுத்துள்ளனர்.
உலகளாவிய கொரோனா பரவலுக்கு மத்தியில் சீனாவின் உயர்மட்ட இராஜதந்திர குழுவினர் தெற்காசிய பிராந்தியத்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் முதலாவது சந்தர்ப்பம் இது என்பது குறிப்பிடத்தக்கது.