July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு கோரி நீர்கொழும்பு நீதிமன்றில் 400 க்கும் மேற்பட்ட வழக்குகள் தாக்கல்

2019 உயிர்த்த ஞாயிறன்று இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதல்களில் இறந்தவர்களின் மற்றும் காயமடைந்தவர்களின் உறவினர்களால் மில்லியன் கணக்கான ரூபாய் இழப்பீடு கோரி,கணிசமான எண்ணிக்கையிலான வழக்குகள் நீர்கொழும்பு மாவட்ட நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

படுகொலைகளைத் தடுக்கத் தவறியது மற்றும் கொலைக்கு உடந்தையாக இருந்தது என்ற அடிப்படையில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் ஐந்து பேர் இந்த வழக்குகளில் பிரதிவாதிகளாக பெயரிடப்பட்டுள்ளனர்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் போது கட்டுவாபிட்டி தேவாலயத்தில் நடந்த குண்டுவெடிப்பில் உயிரிழந்த 115 பேரின் உறவினர்கள் மற்றும் குண்டுவெடிப்பில் காயமடைந்த 350 பேரின் உறவினர்களால் சுமார் 400 வழக்குகள் இவ்வாறு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிரி பெர்னாண்டோ, முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித்த ஜயசுந்தர, அரச புலனாய்வுத்துறையின் முன்னாள் பணிப்பாளர் நிலந்த ஜெயவர்த்தன, முன்னாள் சட்ட மா அதிபர் ஜெயந்த ஜெயசூரிய ஆகியோர் பிரதிவாதிகளாக இந்த வழக்குகளில் பெயரிடப்பட்டுள்ளனர்.

இது தொடர்பாக நீர்கொழும்பு மாவட்ட நீதிமன்றத்தில் விசாரிக்கப்படும் வழக்குகளை விரைவுபடுத்த மனுதாரர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் 40 க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் தற்போது நடவடிக்கை எடுத்து வருகின்றனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது..