
இந்தியாவிலிருந்து கடல் மார்க்கமாக நடக்கும் மஞ்சள் கடத்தல் நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக யாழ். அனலைதீவில் நேற்று கைதுசெய்யப்பட்ட மூவர் இன்று ஊர்காவற்துறை நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
நீதவானின் அனுமதியுடன் பி.சி.ஆர். பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட பின்னர் குறித்த மூவரும் தனிமைப்படுத்தப்பட்ட சிறையில் 14 நாட்கள் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர்.
இதையடுத்து, அனலைதீவில் மஞ்சள் கடத்தல்காரர்கள் நடமாடியதாகக் கருதப்படும் இடங்களில் 10 குடும்பங்களைச் சேர்ந்த 39 பேர் கட்டாயத் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
அத்துடன், அனலைதீவுப் பிரதேசமும் நேற்றுக் காலை முதல் யாரும் வெளியேறாதவாறும் புதிதாக யாரும் உட்பிரவேசிக்காதவாறும் முடக்கப்பட்டுள்ளது.
மஞ்சள் கடத்தலில் ஈடுபட்ட மூவரினதும் பி.சி.ஆர். பரிசோதனை முடிவுகள் வரும் வரை குறித்த முடக்கம் அமுலில் இருக்கும் என ஊர்காவற்துறை சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை தெரிவித்துள்ளது.
அனலைதீவுப் பிரதேசம் தற்போது ஊர்காவற்துறைப் பொலிஸார், கடற்படையினர் மற்றும் சுகாதாரப் பிரிவினரின் தொடர் கண்காணிப்புக்குள் இருக்கின்றது.
இதேவேளை, மஞ்சள் கடத்தல் குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளவர்களில் ஒருவர் காரைநகரில் தலைமறைவாகியிருந்த வீட்டைச் சேர்ந்தவர்களும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.