July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

யாழ். தெல்லிப்பழையில் பாடசாலை மாணவர்கள் மீது கும்பலொன்று தாக்குதல்!

யாழ்ப்பாணம், தெல்லிப்பழை பகுதியில் அமைந்துள்ள பிரபல பாடசாலை வளாகத்திற்குள் புகுந்த கும்பலொன்று மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன்போது காயமடைந்த மாணவர்கள் சிலர் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தமது துவிச்சக்கரவண்டிகளை நிறுத்தும் இடம் தமக்கு சொந்தமானது எனவும், அந்த இடத்தில் துவிச்சக்கரவண்டிகளை நிறுத்தவேண்டாம் எனக்கூறியுமே அந்தக் கும்பல் தாக்குதல் நடத்தியுள்ளதாக மாணவர்கள் தெரிவிக்கின்றனர்.

கடந்த சில மாதங்களாக அந்த காணி தொடர்பான பிரச்சனைகள் காணப்படும் நிலையில், இன்று காலை பாடசாலை ஆரம்பிப்பதற்கு முன்னர் அந்த இடத்திற்கு சென்ற கும்பல், மாணவர்கள் வாகனங்களை நிறுத்தும் இடத்திற்கு செல்ல முடியாதவாறு பாதையை மறித்துள்ளர்.

எனினும், அங்கு ஆசிரியர்கள் வருகை தந்த பின்னர் மாணவர்கள் வாகனங்களை உள்ளே நிறுத்தியபோது அவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதில் ஐந்து மாணவர்கள் காயமடைந்து தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

தெல்லிப்பழை பொலிஸார் சம்பவ இடத்தில் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். இரண்டு தரப்பினரையும் பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து விசாரணைகளை முன்னெடுத்து உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.