
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியனை உடனடியாக குற்றப்புலனாய்வுத் திணைக்களத்துக்கு அழைத்து விசாரணை நடத்த வேண்டுமென இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க சபையில் வலியுறுத்தினார்.
2021ஆம் ஆண்டில் அரச தரப்பினர் மீண்டுமொரு தாக்குதலை நடத்த திட்டமிட்டுள்ளனரா என சாணக்கியன் சபையில் கூறிய கருத்து தொடர்பிலேயே அவர் இந்த விசாரணையை கோரியுள்ளார்.
பாராளுமன்றத்தில் இன்று உரையாற்றும் போதே செஹான் சேமசிங்க இவ்வாறு கூறினார்.
விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாகவும் அவர்களின் கருத்தியலை ஆதரிப்பவர்களும் இன்று எமது அரசாங்கம் மீண்டுமொரு தாக்குதலை நடத்த திட்டமிடுவதாக கூறுகின்றனர் என்றார்.
வேண்டுமென்றே உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களை தடுக்காதிருந்த எதிர்க்கட்சியினர் மீண்டுமொரு காட்டிக்கொடுப்பு தயாராகின்றனரா? எனவும் அவர் கேள்வியெழுப்பினார்.
சாணக்கியனின் கருத்து தொடர்பில் எமக்கு பாரிய சந்தேகங்கள் ஏற்பட்டுள்ளது. எனவே, உடனடியாக அவரிடம் விசாரணைகளை நடாத்தி அவரது கூற்று தொடர்பிலான உண்மை நிலையை அறிந்து பாராளுமன்றத்துக்கும் நாட்டுக்கும் வெளிப்படுத்துவது அத்தியாவசியமாகும் என்றார்.