October 5, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘சீருடை விடயத்தில் கொழும்பு மாநகர சபையையே முன்மாதிரியாக எடுத்தோம்’

கொழும்பு மாநகர சபையைப் பின்பற்றியே யாழ் மாநகர கண்காணிப்பு காவலர்களுக்கும் சீருடை வழங்கப்பட்டதாக மாநகர சபை முதல்வர் சட்டத்தரணி வி. மணிவண்ணன் தெரிவித்துள்ளார்.

யாழ். மாநகர ஆணையாளர் மற்றும் கண்காணிப்பு காவலர்கள் மீதான விசாரணைகள் தொடர்பில் கருத்துத் தெரிவிக்கும் போதே, வி. மணிவண்ணன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

சீருடை வழங்கிய விடயத்தில் வேறு எந்த உள்நோக்கமோ, திட்டமோ தங்களுக்கு இருக்கவில்லை எனவும் யாழ். மாநகர முதல்வர் தெரிவித்துள்ளார்.

யாழ். மாநகரத்தை தூய்மையாகவும், அழகாகவும் பராமரிப்பதற்காகவே மாநகர சபை ஊழியர்களை பணியில் அமர்த்தியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நகரத்தை அசிங்கப்படுத்துபவர்களைக் கண்டறிந்து, நடவடிக்கை எடுப்பதற்காக யாழ். மாநகர சபையில் தீர்மானம் நிறைவேற்றி, தீர்மானத்தின் ஊடாக எவ்வளவு ரூபா தண்டப் பணம் அறவிடுவது என்பதை வர்த்தமானியில் அறிவித்து, அந்த வர்த்தமானி வெளியாகிய பின்னரே ஊழியர்கள் கண்காணிப்புப் பணியில் அமர்த்தப்பட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஊழியர்களை மக்கள் இலகுவாக அடையாளம் காணவேண்டிய தேவை இருந்ததாலேயே, குறித்த சீருடை அறிமுகப்படுத்தப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

தமிழீழ விடுதலைப் புலிகளின் காவல்துறையின் சீருடை என்று சிலர் குற்றம்சாட்டினாலும், தாம் கொழும்பு மாநகர சபையை முன்மாதிரியாகக் கொண்டே இதனை செய்ததாகவும் மணிவண்ணன் விளக்கமளித்துள்ளார்.