July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘வடக்கு- கிழக்கில் பௌத்த தொல்பொருள் அடையாளங்களே காணப்படுகின்றன’: பாராளுமன்றத்தில் விதுர விக்ரமநாயக்க

இலங்கையின் வடக்கு- கிழக்கு பிரதேசங்களில் அதிகளவான பௌத்த தொல்பொருள் அடையாளங்களே காணப்படுவதாக இராஜாங்க அமைச்சர் விதுர விக்ரமநாயக்க பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் வாய்மூல வினாக்களுக்கான நேரத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சார்ல்ஸ் நிர்மலநாதன், தொல்பொருள் ஆய்வுகள் குறித்த கேள்விக்குப் பதிலளிக்கும் போதே, இராஜாங்க அமைச்சர் இவ்வாறு கூறியுள்ளார்.

இந்த நாட்டின் பெரும்பாலான தொல்பொருள் பகுதிகள் பௌத்த அடையாளங்களைக் கொண்டவை என்பதை மறுக்க முடியாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

தமிழ் மக்களை இலக்கு வைத்து வடக்கு- கிழக்கில் தொல்பொருள் ஆய்வுகள் மேற்கொள்ளப்படவில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

“தொல்பொருள் ஆய்வுகளை முன்னெடுக்கும் வேளைகளில் பிரதேச செயலகதிற்கோ, அதிகாரிகளுக்கோ அறிவிக்கப்படுவதில்லை. எவ்வாறு இருப்பினும் வடக்கில் விசேட கவனம் செலுத்தி முன் அறிவிப்பு விடுத்து ஆய்வுகளை செய்ய முயற்சிக்கின்றோம்.

இவ்வாறான ஆய்வுகளை முன்னெடுப்பதால் எந்தவொரு சமூகத்திற்கும் நெருக்கடிகள் ஏற்படுவதில்லை.

இவை எந்தவொரு மதம் அல்லது இனம் சார்ந்து எடுக்கும் ஆய்வுகள் அல்ல.

ஆனால், தவறான கருத்துக்களை முன்வைத்து, மக்களிடம் முரண்பாடுகளை ஏற்படுத்தக்கூடாது.

நாட்டின் வரலாற்றை, தொன்மையை ஆய்வு செய்வதில் எந்தவொரு மதத்துடனும் இனத்துடனும் அது நின்றுவிடக்கூடாது. தமிழர்களுக்கும் இதுதான் நாடு, எனவே சகலரதும் வரலாறுகளை ஆராய்வதே எமது நோக்கம்”

எனவும் இராஜாங்க அமைச்சர் பதிலளித்துள்ளார்.