July 4, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘மட்டக்களப்பு மாநகர முதல்வரினால் மீளப்பெறப்பட்ட அதிகாரங்களில் தலையீடு செய்ய ஆணையாளருக்கு இடைக்காலத் தடை’

மட்டக்களப்பு மாநகரசபை முதல்வரினால் சபை அனுமதியுடன் பிரதி ஆணையாளருக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தில் ஆணையாளர் தலையிடுவதை தடுக்கும் வகையில் இடைக்கால தடையுத்தரவு வழங்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி சட்டத்தரணியும் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாநகர மேயரால், ஆணையாளருக்கு எதிராக இடைக்கால தடை எழுத்தாணை கோரி மட்டக்களப்பு மேல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் விசாரணை மட்டக்களப்பு மேல் நீதிமன்றத்தில் நடைபெற்றது.

மாநகர சட்டத்தின்படி மேயருக்கு இருக்கின்ற அதிகாரங்களை, விரும்பினால் ஆணையாளருக்கு பாரப்படுத்தலாம். அந்த அடிப்படையில் புதிய ஆணையாளர் பொறுப்பேற்றபோது 10 அதிகாரங்கள் அவரிடம் கையளிக்கப்பட்டிருந்தன. ஆனால், அதற்குப் பின்னர், கடந்த பெப்ரவரி 11 ஆம் திகதி இன்னொரு சபை தீர்மானத்தின் மூலமாக கையளிக்கப்பட்ட அதிகாரங்கள் மீளப் பெறப்பட்டன. அந்த அதிகாரங்களை சட்டப்படி மீளப்பெற்றிருந்தாலும் கூட தான் அதற்கு ஒழுகி நடக்கமாட்டேன் என்றும், அந்த அதிகாரங்களை தானே பயன்படுத்துவேன் என்றும் ஆணையாளர் விடாப்பிடியாகச் செயற்பட்டுக்கொண்டிருப்பதன் காரணமாக அவரை அப்படியான செயற்பாட்டில் இருந்து தவிர்ப்பதற்கும், அந்த அதிகாரங்களை அவர் உபயோகிப்பதைச் சட்டப்படியாக நிறுத்துவதற்கும் இடைக்காலத் தடை எழுத்தாணை கோரி விண்ணப்பம் செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பான வழக்கு மட்டக்களப்பு மேல் நீதிமன்றில் நீதிபதி எம்.என்.அப்துல்லா தலைமையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

கடந்த தவணை இந்த வழக்கு தொடர்பான அறிவித்தல்கள் பிரதிவாதிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்த நிலையில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டன.

ஆட்சேபனை தொடர்பான விவாதத்தினையும் இடைக்கால தடையுத்தரவு விவாதத்தினையும் செவிமடுத்த நீதிமன்றம் ஜூன் மாதம் 3 ஆம் திகதிக்கு வழக்கினை ஒத்திவைத்தது.

இது தொடர்பில் ஜனாதிபதி சட்டத்தரணி, பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவிக்கையில்;

மாநகர சபையினால் மேற்கொள்ளப்பட்ட அதிகாரக் குறைப்பு விடயத்திற்கு எதிராக மாநகர ஆணையாளர் செயற்படுவதற்கு தடையாணை கேட்டு தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான இடைக்காலத் தடையுத்தரவிற்கான விசாரணை இடம்பெற்றது. சென்ற தவைணை இந்த மனு சம்பந்தமான அறிவித்தல் இரண்டு பிரதிவாதிகளுக்கும் அனுப்பப்பட்டு இடைக்காலத் தடையுத்தரவு சம்பந்தமான விசாரணை நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், இரண்டு பிரதிவாதிகளும் மன்றுக்கு சமுகமளித்திருந்தார்கள். அவர்கள் சார்பில் சட்டத்தரணியொருவரும் ஆஜராகியிருந்தார்.

அதற்கிணங்க அவர்களால் பூர்வாங்க ஆட்சேபனையொன்று சமர்ப்பிக்கப்பட்டிருந்தது. மாகாண ஆளுநர் பிரதிவாதியாகச் சேர்த்துக் கொள்ளப்பட வேண்டும் என்கின்ற ஆட்சேபனை சமர்ப்பிக்கப்பட்டது. ஏனெனில் ஆணையாளர் ஆளுநரின் மேற்பார்வையின் கீழ் தொழில் செய்கின்ற ஒருவர். அவரின் தொழில் சம்பந்தமான விடயங்கள் அல்லது நடவடிக்கைகள் குறித்து விசாரணைகள் செய்வதாக இருந்தால் ஆளுநர்தான் அதனைச் செய்ய வேண்டும். எனவே ஆளுநருக்கு அறிவிப்பதற்காகவாவது ஆளுநரும் பிரதிவாதியாகச் சேர்த்திருக்கப்படல் வேண்டும் என்கின்ற பூர்வாங்க ஆட்சேபனையொன்று முதலிலே எடுக்கப்பட்டது.

ஆணையாளரின் தொழில்சார் விடயங்களை நாங்கள் விசாரணைக்கு உட்படுத்தவில்லை. இங்கு கொண்டுவரப்பட்டிருப்பது மாநகர சபையினுடைய நிறைவேற்று அதிகாரம் தொடர்பான விடயம். மாநகரசபை என்பது மக்களால் தெரிவு செய்யப்பட்டிருக்கின்ற சபை. அதற்கு எவ்வாறான அதிகாரங்கள் உண்டு என்பது சட்டத்தில் சொல்லப்பட்டிருக்கின்றது. இந்த அதிகாரங்களிலே நிறைவேற்று அதிகாரியாகக் கடமையாற்றுகின்றவர் மாநகரசபையினுடைய முதல்வர். எனவே முற்றுமுழுதாக மாநகர முதல்வரின் கையில் தான் சட்டம் அந்த அதிகாரத்தினை கொடுத்திருக்கின்றது. அந்த அதிகாரத்தினை மாநகர முதல்வர் பிரதி முதல்வருக்கு, ஆணையாளருக்கு அல்லது வேறேதும் உத்தியோகத்தருக்கு கையளிக்கலாம் என்றும் சொல்லியிருக்கின்றது.

இந்த வழக்கில் நாங்கள் சொல்லியிருக்கும் முறைப்பாடு என்பது ஆணையாளருக்கு முதல்வரால் ஆரம்பத்தில் கையளிக்கப்பட்ட பத்து அதிகாரங்கள் திரும்பவும் மாநகரசபையின் தீர்மானத்தால் மீளப்பெறப்பட்டிருக்கின்றது. அதனை மீளப்பெற்ற காரணத்தினால் அந்த அதிகாரங்களை மாநகர ஆணையாளர் கையாள முடியாது. அதுமட்டுமல்ல அவற்றில் பல அதிகாரங்கள் வேறு அதிகாரிகளுக்கும் கையளிக்கப்பட்டிருக்கின்றன.

பூர்வாங்க ஆட்சேபனை சம்பந்தமான விவாதத்தையும், இடைக்கால உத்தரவு சம்பந்தமான விவாதத்தையும் நீதிமன்றம் விவாதிப்பதற்காக வழக்கை ஜூன் மாதம் 03 ஆம் திகதியிட்டு எதிர்மனுதாரர்கள் அவர்களின் பூர்வாங்க ஆட்சேபனை சம்பந்தமாக இரு தரப்பினரும் எழுத்து மூலமான சமர்ப்பணங்களை செய்வதற்கு அந்தத் திகதி கொடுக்கப்பட்டுள்ளது.

அந்தத் திகதி வரைக்கும் அமுலில் இருக்கத்தக்கதாக தற்போது அதிகாரக் கையளிப்பு தொடர்பிலே ஏற்கனவே அதிகாரங்கள் மீளப்பெறப்பட்டிருக்குமாக இருந்தாலும், அவ்வதிகாரங்கள் ஏனையவர்களிடம் கையளிக்கப்பட்டிருக்குமாக இருந்தால் அது சம்பந்தமான அதிகாரங்களில் ஆணையாளர் தலையீடு செய்யக் கூடாது என்கின்ற இடைக்காலத் தடையுத்தரவொன்று பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. அத்துடன் அந்தத் திகதி வரைக்கும் வேறு அதிகாரக் கையளிப்புகள் செய்ய வேண்டாம் எனவும் மாநகர முதல்வருக்கு சொல்லப்பட்டிருக்கின்றது.அதாவது தற்போது இருக்கின்ற நிலமையைப் பேணும்படியாக சொல்லப்பட்டிருக்கிறது.

அதற்கமைய அதிகாரம் ஆணையாளரிடம் இருந்து மீளப்பெறப்பட்டிருக்கின்றது. அது ஏனையவர்களுக்கு கையளிக்கப்பட்டிருக்கின்றது. அது சம்பந்தமாக ஆணையாளர் தலையீடு செய்யக்கூடாது என்பது தான் இடைக்கால உத்தரவினுடைய கோரிக்கை. அது கொடுக்கப்பட்டிருக்கின்ற அதேவேளை, இருக்கின்ற நிலைமையைப் பேணுவதற்காக வேறேதும் அதிகாரக் கையளிப்புகள், மீளப்பெறுகைகள் மேற்கொள்வது செய்யக்கூடாது என்றும் அதே நேரத்தில் ஆணையாளருக்கு சட்டத்தின் 245ஏ பிரிவின் கீழுள்ள படியான அதிகாரங்களை அவர் தொடர்ந்து கையாளலாம். அது சம்பந்தமாக நாங்களும் எதுவும் கூறியிருக்கவில்லை. அது அவருக்கான அதிகாரம். ஆனால் ஏற்கனவே சபையினால் கையளிக்கப்பட்டு மீளப்பெறப்பட்ட அதிகாரங்கள் தொடர்பில் அவர் தலையிடக் கூடாது என்பது தான் எங்கள் கோரிக்கை. அது தொடர்பில் அவர் தலையீடு செய்யக்கூடாது என்றே நீதிமன்றம் இடைக்காலத் தடையு த்தரவு வழங்கியுள்ளது என்று அவர் மேலும் தெரிவித்தார்.