July 4, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘ஜெனிவா வாக்கெடுப்பு முடிவுகள் தேசத் துரோகிகளை அடையாளம் காட்டியுள்ளன’: ஷெஹான் சேமசிங்க

இலங்கை மீதான ஜெனிவா வாக்கெடுப்பு முடிவுகள் தாய் நாட்டை உண்மையாக நேசிப்பவர்களையும், பணம் மற்றும் அதிகாரத்திற்காக தாய் நாட்டைக் காட்டிக் கொடுக்கத் தயாராக உள்ளவர்களையும் தெளிவாக அடையாளம் காட்டியுள்ளதாக இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நடைபெற்ற ஊடக சந்திப்பொன்றில் உரையாற்றும் போதே, அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

ஜெனிவா விவகாரத்தில் தாய் நாட்டின் நலனுக்கு முன்னுரிமை வழங்கிய குழுவினரையும், பணம் மற்றும் அதிகாரத்திற்காக நாட்டை அழிவுக்கு இட்டுச் செல்லத் தயாராகவுள்ள குழுவினரையும் தாம் அடையாளம் கண்டுகொண்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஐநா தீர்மானம் நிறைவேற்றப்பட்டு இருந்தாலும், இலங்கை மீது பொருளாதாரத் தடைகள் விதிப்பதற்குரிய சாத்தியங்கள் இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

ஜெனிவா மனித உரிமைகள் பேரவையைப் பயன்படுத்தி சில பிரிவினர் இலங்கையை இழிவுபடுத்த முயற்சிப்பதாகவும் ஷெஹான் சேமசிங்க குற்றம்சாட்டியுள்ளார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் எதிர்க்கட்சிகள் நாட்டை இழிவுபடுத்தும் முயற்சிகளில் கைகோர்த்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.