July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இந்திய புலமைப் பரிசில்களுக்காக இலங்கை மாணவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன

இந்தியாவில் பட்டப் படிப்பு, பட்டப்பின் படிப்பு மற்றும் ஆராய்ச்சி/கலாநிதி கற்கை நெறிகளுக்கான புலமைப் பரிசில்களுக்கு இலங்கை பிரஜைகளிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

நேரு ஞாபகார்த்த புலமைப் பரிசில் திட்டம், மௌலானா ஆசாத் புலமைப் பரிசில் திட்டம், ராஜிவ் காந்தி புலமைப் பரிசில் திட்டம் மற்றும் பொதுநலவாய புலமைப் பரிசில் திட்டம் ஆகியவற்றுக்காக விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

கலாசார உறவுகளுக்கான இந்தியக் கவுன்சிலின் ஊடாக 2021-2022 கல்வி ஆண்டுக்காக விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளதாக கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேரு ஞாபகார்த்த புலமைப் பரிசில் திட்டத்தில் பொறியியல், விஞ்ஞானம், வியாபாரம், பொருளியல், வர்த்தகம், மானுடவியல் மற்றும் கலை உட்பட (மருத்துவம்/மருத்துவ உதவி மற்றும் ஆடை வடிவமைப்பு கற்கை நெறி தவிர்ந்த) அனைத்து பட்டப்படிப்பு கற்கைநெறிகளுக்கும் விண்ணப்பிக்கலாம்.

மௌலானா ஆசாத் புலமைப் பரிசில் திட்டத்தில் பொறியியல், விஞ்ஞானம், வியாபாரம், பொருளியல், வர்த்தகம், மானுடவியல் மற்றும் கலை உட்பட (மருத்துவம்/துணைமருத்துவம் மற்றும் ஆடை வடிவமைப்பு கற்கைநெறி தவிர்ந்த) முதுமாணிப் பட்டக் கற்கைகளுக்கு விண்ணப்பிக்க முடியும். பொறியியல், விஞ்ஞானம் மற்றும் விவசாயம் ஆகிய துறைகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

ராஜிவ் காந்தி புலமைப் பரிசில் திட்டத்தில் B.E அல்லது B.Tech பட்டப் படிப்புகளுக்கு வழிசமைக்கும் ‘தகவல் தொழில்நுட்பத் துறைகளிலான பட்டப்படிப்புக் கற்கைநெறிகளுக்கு விண்ணப்பிக்கலாம்.

பொதுநலவாய புலமைப் பரிசில் திட்டத்தில் மருத்துவம்/ துணைமருத்துவம் மற்றும் ஆடை வடிவமைப்புக் கற்கை நெறிகள் தவிர்த்து அனைத்துத் துறைகளின் கலாநிதிப் பட்ட கற்கைநெறிகளுக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

இந்தப் புலமைப் பரிசில்களை வழங்குவதற்காக தகுதி வாய்ந்த இலங்கைப் பிரஜைகளை இந்திய அரசாங்கம் தெரிவு செய்யும்.

இந்தியாவிலுள்ள சிறந்த பல்கலைக்கழகங்களில் பட்டப்படிப்பு, பட்டப் பின்படிப்பு மற்றும் கலாநிதிப் பட்டங்களுக்கான கற்கைகளைத் தொடர்வதற்கு விண்ணப்பதாரிகளின் தெரிவு செய்தல் இலங்கை அரசாங்கத்தின் கல்வி அமைச்சுடனான கலந்தாலோசனையில் மேற்கொள்ளப்படும்.

அனைத்துப் புலமைப் பரிசில்களும் கற்கை நெறிகளின் முழுமையான காலத்திற்கும் கல்விக் கட்டணம், மாதாந்த அடிப்படைச் சலுகைக் கட்டணம், மற்றும் புத்தகங்கள் மற்றும் காகிதாதிகளுக்கான வருடாந்த கொடுப்பனவு என்பவற்றை உள்ளடக்குகின்றது.

தெரிவு செய்யப்பட்ட விண்ணப்பதாரிகளுக்கு பல்கலைக் கழக வளாகத்தினுள் விடுதி வசதிகளும் வழங்கப்படும். மேலும், இந்தியாவிலுள்ள அனைத்து ஐ.சி.சி.ஆர் புலமைப் பரிசில் பெற்றவர்களுக்கும், இந்தியாவிலுள்ள அண்மித்த பயணச் சேரிடங்களுக்கான விமானக் கட்டணம் மற்றும் நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு கல்விச் சுற்றுலாவுக்கான வருடாந்தக் கொடுப்பனவு என்பனவும், இவற்றை விட ஏனைய பல்வேறு அனுகூலங்களும் வழங்கப்படும்.

இது தொடர்பான தகவல்களை இலங்கை கல்வி அமைச்சின் www.mohe.gov.lk எனும் இணையத்தள முகவரியிலிருந்து பெற்றுக்கொள்ளமுடியும்.

இந்த கற்கை நெறிகளுக்கான தகைமை மற்றும் தெரிவு செய்தல் நடைமுறை தொடர்பாக மேலும் அறிந்து கொள்ள விரும்பும் மாணவர்கள் கல்வி அமைச்சு அல்லது கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் ஆகியவற்றை அணுக முடியும்.

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் பிள்ளைகளுக்கு புலமைப் பரிசில்

இலங்கை பெருந்தோட்ட தொழிலாளர் கல்வி நிதியத்தினால் புலமைப் பரிசில்கள் வழங்கப்படுவதற்காக பெருந்தோட்டத் தொழிலாளர்களின் பிள்ளைகளிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

இந்தப் புலமைப் பரிசில்களுக்காக க.பொ.த உயர்தரம், பட்டப்படிப்புக் கற்கை நெறிகள் மற்றும் இலங்கையின் ஏதேனும் அரசாங்க தொழில்நுட்பக் கல்லூரிகளில் தொழில்/ தொழில்நுட்பக் கல்வியை மேற்கொள்ளும் மாணவர்களுக்கு விண்ணப்பிக்க முடியும்.

விண்ணப்பப் படிவங்கள் இந்திய உயர் ஸ்தானிகராலயத்தின் www.hcicolombo.gov.in எனும் இணையத்தள முகவரியிலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ள முடியும்.