July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

கட்சி உறுப்பினர்கள் நீக்கம்: அ. இ. தமிழ்க் காங்கிரஸ் தாக்கல் செய்த மேன்முறையீடு தள்ளுபடி

யாழ். மாநகர சபை உறுப்பினர்களான வி.மணிவண்ணன், பா.மயூரன் ஆகியோரை கட்சியிலிருந்து விலக்கும் தீர்மானத்திற்கு வழங்கப்பட்டிருந்த இடைக்காலத் தடையை நீக்கக் கோரி அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் தாக்கல் செய்திருந்த மேன்முறையீடு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

தமது உறுப்புரிமையை நீக்குவதற்கு கட்சி எடுத்த தீர்மானத்தை ஆட்சேபித்து வி.மணிவண்ணன், பா.மயூரன் ஆகியோர் மனுத் தாக்கல் செய்திருந்த நிலையில், அவர்களை நீக்கும் முடிவிற்கு யாழ். மாவட்ட நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்திருந்தது.

மேற்படி இடைக்காலத் தடைக்கு எதிராக அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் கட்சியினர் மாகாண சிவில் மேன்முறையீட்டு மேல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனுவை நீதிபதிகளான பாலேந்திரன் சசி மகேந்திரன் மற்றும் ரி.எல்.அப்துல் முனாப் ஆகியோர் தள்ளுபடி செய்துள்ளனர்.

இதேவேளை, அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸின் தலைவர் ஆனந்தராசா, பொதுச்செயலாளர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஆகியோருக்கு எதிராக யாழ். மாநகர முதல்வர் வி.மணிவண்ணன் தாக்கல் செய்திருந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கை யாழ். மாவட்ட நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.

குறித்த வழக்கு நேற்று புதன்கிழமை பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது பிரதிவாதிகளான குறித்த கட்சியின் தலைவரும் பொதுச்செயலாளரும் மன்றில் ஆஜராகியிருந்தனர்.

இதன்போது, வழக்கை மே மாதம் 19 ஆம் திகதிக்கு ஒத்திவைத்து நீதவான் சி.சதீஸ்கரன் உத்தரவிட்டுள்ளார்.