July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘பொது மன்னிப்பு அளிக்கும் கொள்கைத் திட்டத்தில் அரசியல் கைதிகள் உள்வாங்கப்படவில்லை’

சிறைக்கைதிகளுக்கு பொது மன்னிப்பு அளிக்கும் கொள்கைத்திட்ட செயற்பாட்டுக் குழு அறிக்கையில் அரசியல் கைதிகளை விடுவிக்கும் விடயம் உள்வாங்கப்படவில்லை என நீதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

கொவிட் நிலைமையை கருத்தில் கொண்டும் நாட்டிலுள்ள சிறைச்சாலைகளில் நிலவி வரும் நெருக்கடிகளை குறைக்கும் நோக்கிலும் சிறைக் கைதிகளை பொது மன்னிப்பு அளித்து விடுதலை செய்வதற்கான வேலைத்திட்டமொன்று  விசேட பொறிமுறையின் ஊடாக முன்னெடுக்கப்பட்டது.

இந்நிலையில், அமைச்சின் மேலதிக செயலாளர் எச்.எம்.என்.சி. தனசிங்கவை தலைவராகக் கொண்ட குழுவினரால் ஆராயப்பட்டு வகுக்கப்பட்ட கொள்கைத்திட்ட அறிக்கை நீதி அமைச்சர் அலி சப்ரி, இராஜாங்க அமைச்சர்களான லொஹான் ரத்வத்தே, சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே ஆகியோரிடம் கையளிக்கப்பட்டது.

இந்நிகழ்வின் போது கொள்கைத் திட்டத்தின் ஊடாக அரசியல் கைதிகள் விடுவிக்கப்படுவார்களா? என ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர் அலி சப்ரி, அரசியல் கைதிகள் விடுவிக்கப்படமாட்டார்கள் என தெரிவித்தார்.

இந்த பொது மன்னிப்பு கொள்கைத் செயற்திட்ட அறிக்கையில் அரசியல் கைதிகளுடன், தீவிரவாதம், பாலியல் துஷ்பிரயோகம், போதைப்பொருள் கடத்தல் ஆகிய குற்றங்களை புரிந்த சிறைக்கைதிகள் உள்வாங்கப்படவில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

எனினும் சிறு சிறு குற்றங்களை புரிந்தவர்கள், நீண்ட காலமாக சிறைவாசம் அனுபவிப்பவர்களை விடுதலை செய்வது தொடர்பில் குறிப்பிடப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

அமைச்சரவை அங்கீகாரம் கிடைத்ததும் இந்த அறிக்கை செயற்பாட்டுக்கு வரும் என்றும் அதன்படி, தமிழ் – சிங்கள புதுவருடத்துக்கு பின்னர் தெரிவு செய்யப்பட்ட 8000 சிறைக்கைதிகள் விடுவிக்கப்படுவர் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.