July 4, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

”இந்திய மீனவர்களுக்கு இலங்கைக் கடலில் மீன்பிடிக்க எந்த அனுமதியும் வழங்கப்படவில்லை”

இலங்கை கடல் பரப்பில் மீன்பிடிப்பதற்கு இந்திய மீனவர்களுக்கு அனுமதியளிக்க அரசாங்கம் எந்தத் தீர்மானத்தையும் மேற்கொள்ளவில்லை என்று அமைச்சரவை இணை பேச்சாளர் அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

இந்திய மீனவர்களுக்கு இலங்கைக் கடலில் மீன் பிடிக்க அனுமதிப் பத்திரத்தை வழங்கவுள்ளதாக கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளதாக ஊடகங்களில் வெளியாகும் தகவல்கள் குறித்து, இன்று நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் கருத்துக் கூறும் போதே உதய கம்மன்பில இவ்வாறு கூறியுள்ளார்.

”இந்த விடயத்தில் அமைச்சரால் தனியாக தீர்மானம் எடுக்க முடியாது. அமைச்சரவையில் கலந்துரையாடி தீர்மானிக்க வேண்டும். ஆனால் இதுவரையில் சம்பந்தப்பட்ட அமைச்சர் அவ்வாறான யோசனையை அமைச்சரவையில் சமர்பிக்கவில்லை” என்று அமைச்சர் கம்மன்பில தெரிவித்துள்ளார்.

இதனால் அரசாங்கம் என்ற ரீதியில் இந்திய மீனவர்களுக்கு இலங்கைக் கடலில் மீன்பிடிக்க எந்த வகையிலும் அனுமதி வழங்கப்படவில்லை என்று கம்மன்பில மேலும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை இந்தியாவில் கைது செய்யப்பட்டுள்ள இலங்கை மீனவர்களின் விடுதலை தொடர்பாக அரசாங்கம் கலந்துரையாடி வருவதாகவும், இது தொடர்பில் விரைவில் இந்தியாவிடமிருந்து சாதகமான பதில் கிடைக்குமென எதிர்பார்ப்பதாகவும் இந்த ஊடக சந்திப்பில் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.