October 5, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘அபிவிருத்தி என்ற போர்வையில் தமிழர்களுடைய வளங்கள் அபகரிக்கப்படுகின்றன’

அபிவிருத்தி என்ற போர்வையில் தமிழர்களுடைய பல பிரதேசங்களின் வளங்கள் அபகரிக்கப்படுகின்றன. ஆனால் வடக்கு ,கிழக்கு மக்களை ஏமாற்றி கடந்த காலத்தில் வாக்குகள் பெற்றுக்கொண்ட ஆளுந்தரப்பு அரசியற் பிரமுகர்கள் யாரும் இவற்றுக்கு எதிராக குரல்கொடுத்ததாக தெரியவில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.

திருக்கோவிலில் இடம்பெற்ற இலங்கைத் தமிழரசு கட்சியின் கலந்துரையாடலில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இங்கு தொடர்ந்து பேசிய அவர் மேலும் தெரிவிக்கையில்;

அபிவிருத்தி என்ற போர்வையில் தமிழர்களுடைய பல பிரதேசங்களின் வளங்கள் அபரிக்கப்படுகின்றன. இது தமிழர்களுடைய அனைத்த்து மாவட்டங்களிலும் நடைபெறுகின்றது. அம்பாறை மாவட்டத்திலும் இல்மனைட் பிரச்சினை பாரிய பிரச்சினையாக இருக்கின்றது.ஆனால் வடக்கு, கிழக்கு மக்களை ஏமாற்றி கடந்த காலத்தில் வாக்குகள் பெற்றுக்கொண்ட ஆளுந்தரப்பு அரசியற் பிரமுகர்கள் யாரும் இவை தொடர்பில் குரல்கொடுத்ததாகத் தெரியவில்லை.

கடந்த காலங்களில் அபிவிருத்தியை நம்மவர்களும் மேற்கொண்டார்கள். ஆனால் அவர்கள் விளம்பரப்படுத்தவில்லை. ஆனால் நாங்கள் செய்யத்தவறிய ஒரே ஒரு விடயத்தை மாத்திரம் விளம்பரப்படுத்தி கடந்த தேர்தலில் எங்களுடைய பாராளுமன்றப் பிரதிநிதித்துவத்தை இல்லாமல் செய்வதற்கு சிலர் முயற்சிகள் எடுத்திருந்தார்கள் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.