July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

வடமாகாணத்தில் அதிகரிக்கும் கொரோனா தொற்று; மேலும் 26 பேருக்கு தொற்று உறுதி

வட மாகாணத்தில் யாழ்ப்பாணத்தில் 21 பேருக்கும் வவுனியா, முல்லைத்தீவில் தலா 2 பேருக்கும் கிளிநொச்சியில் ஒருவருக்கும் என மேலும் 26 பேருக்கு கொரோனா தொற்று உள்ளமை திங்கட்கிழமை கண்டறியப்பட்டுள்ளது என்று வட மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர்,மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக கருத்து தெரிவித்த ,மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் மேலும் தெரிவிக்கையில்;

‘யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் 370 பேரின் மாதிரிகள் இன்று பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட வேளையிலேயே 26 பேருக்கு தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் மாநகர வர்த்தக நிலையங்களின் உரிமையாளர்கள் மற்றும் பணியாளர்கள் 104 பேரின் மாதிரிகள் பரிசோதனைக்கு உட் படுத்தியதில் 8 பேருக்கு தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டது.

திருநெல்வேலி பொதுச் சந்தை தொகுதி கடைகளின் வியாபாரிகள் மற்றும் பணியாளர்களிடம் முன்னெடுக்கப்பட்ட பரிசோதனையில் 4 பேருக்கு தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.மேலும் அவர்களின் நேரடித் தொடர்புடைய மூவருக்கு கொரோனா தொற்று உள்ளமை கண்டறியப்பட்டது.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை தனிமைப்படுத்தல் விடுதியில் அறிகுறிகளுடன் சேர்க்கப்பட்ட 3 பேருக்கு தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

சாவகச்சேரி, பருத்தித்துறை வைத்தியசாலைகளின் தனிமைப்படுத்தல் விடுதிகளில் நோய் அறிகுறிகளுடன் சேர்க்கப்பட்ட இருவருக்கு தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

உடுவில் சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் சுயதனிமைப்படுத்தப்பட்டிருந்த ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

மேலும்,வவுனியா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட இருவருக்கும் முல்லைத்தீவு வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட இருவருக்கும் கொ விட்-19 நோய்த் தொற்று உள்ளமை பரிசோதனையில் கண்டறியப்பட்டுள்ளது.

அதேபோல்,யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை 29 ஆவது சத்திர சிகிச்சை விடுதியில் சிகிச்சை பெற்று கடந்த வாரம் வீடு திரும்பிய கண்டாவளை சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவைச் சேர்ந்த ஒருவருக்கு தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது” என்றும் வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.