July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

அடிப்படைவாதத்தை போதிக்கும் இஸ்லாமிய போதகர்களை நாடு கடத்த வேண்டும் என்கிறது கத்தோலிக்கச் சபை

தேசியப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலான அடிப்படைவாத முஸ்லிம் குழுக்களை முற்றாக தடை செய்வதுடன், அவர்களுடன் தொடர்புடைய வெளிநாட்டு அனுசரணையாளர்கள் மற்றும் அடிப்படைவாத போதனையாளர்களை அடையாளம் கண்டு அவர்களை இலங்கையில் இருந்து நாடு கடத்த வேண்டும் என்று கத்தோலிக்க திருச்சபை தெரிவித்துள்ளது.

இதேவேளை, ஈஸ்டர் தாக்குதலுடன் தொடர்புடைய சஹரான் ஹாசீமுடன் வடக்கு, கிழக்கில் பல்வேறு வழிகளிலும் கொடுக்கல் வாங்கல்களை பேணிய சகல நபர்கள் மற்றும் அமைப்புகள் தொடர்பாகவும் விரிவான விசாரணைகள் நடத்தப்பட வேண்டுமெனவும் கத்தோலிக்க திருச்சபை வலியுறுத்தியுள்ளது.

கொழும்பு பேராயர் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை உள்ளிட்ட கத்தோலிக்க திருச்சபையின் 13 உறுப்பினர்களின் கையொப்பத்துடன் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையொன்றிலேயே இந்த விடயங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.

அந்த அறிக்கையில், ஈஸ்டர் தாக்குதல் கிறிஸ்தவர்களுக்கு எதிரான தாக்குதல் மாத்திரமன்றி முழு இலங்கையருக்குமான தாக்குதலே எனவும், ஆனால் அதில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இன்னும் நீதி நிலைநாட்டப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் நீதியை நிலைநாட்டும் செயற்பாடுகளுக்கு அழுத்தம் கொடுப்பதை தவிர்த்துக்கொள்ளுமாறு அரசாங்கம் மற்றும் எதிர்க்கட்சியினரை கேட்டுக்கொள்வதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த விடயத்தில் நீதி நிலைநாட்டப்பட வேண்டுமாயின், ஈஸ்டர் தாக்குதலுடன் நேரடியாகவும், மறைமுகமாகவும் தொடர்புபட்ட மற்றும் சம்பவத்திற்கு பொறுப்புக் கூற வேண்டிய அனைவர் மீதான விசாரணைகளையும் துரிதப்படுத்தவும், தற்போது கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபர்கள் தொடர்பான சட்ட நடவடிக்கையை முன்னெடுக்கவும் வேண்டும் என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

அத்துடன், சஹரானுடன் தொடர்புகளை பேணிய அனைவரும் விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்பதுடன், அடிப்படைவாத முஸ்லிம் குழுக்களை முற்றாக தடை செய்ய நடவடிக்கையெடுக்கவும், அவர்களுடன் தொடர்புடைய வெளிநாட்டு அனுசரணையாளர்கள் மற்றும் அடிப்படைவாத போதனையாளர்களை நாடு கடத்தவும் நடவடிக்கையெடுக்க வேண்டும் என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.