July 4, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

யாழ். நிலாவரை அகழ்வு பணிகள் தடுக்கப்பட்டமை தொடர்பில் தவிசாளர் பொலிஸ் நிலையம் அழைப்பு

யாழ்ப்பாணம்,நிலாவரை பகுதியில் இராணுவமும், தொல்லியல் திணைக்களமும் இணைந்து மேற்கொள்ள முயற்சித்த அகழ்வுப் பணிகள் தடுக்கப்பட்டமை தொடர்பில் வலிகாமம் கிழக்கு பிரதேச சபை தவிசாளர் தியாகராஜா நிரோஷ் விசாரணைகளுக்காக பொலிஸ் நிலையம் அழைக்கப்பட்டுள்ளார்.

வலிகாமம் கிழக்கு பிரதேச சபைக்குட்பட்ட புத்தூர் நிலாவரைக் கிணற்றுக்கு அருகில்  ஜனவரி மாத இறுதியிலும் கடந்த வெள்ளிக்கிழமையன்றும் நிலாவரையில் சந்தேகத்திற்கிடமான வகையில் இராணுவத்துடன் இணைந்து தொல்லியல் திணைக்களத்தினர் அகழ்வுப் பணிகளில் ஈடுபட முயற்சித்தவேளையில்,வலிகாமம் கிழக்கு பிரதேச சபைத் தவிசாளார் மற்றும் அரசியல் பிரதிநிதிகள், பொதுமக்களினால் அந்த முயற்சி தடுத்து நிறுத்தப்பட்டிருந்தது.

இந்நிலையில் அகழ்வுப் பணிகள் தடுக்கப்பட்டமை தொடர்பாக அச்சுவேலி பொலிஸ் நிலையத்தில் தொல்லியல் திணைக்கள அதிகாரிகளினால் முறைப்பாடு ஒன்று பதிவு செய்யப்பட்டது.

இதனையடுத்து இந்த முறைப்பாட்டுக்கமைய அச்சுவேலி பொலிஸ் நிலையத்தில் இருந்து இன்றையதினம் வலிகாமம் கிழக்குப் பிரதேச சபை தவிசாளர் தியாகராஜா நிரோஷ் மற்றும் தொல்லியல் திணைக்கள அதிகாரிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, இவ்விடயம் தொடர்பில் ஆராய்வதற்காக அச்சுவேலி பொலிஸ் நிலையத்திற்கு பொலிஸ் உயர் அதிகாரிகளும் வருகை தரவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.