October 5, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

யாழ். புங்குடுதீவில் பூசகர் கொலை; மூவர் கைது

யாழ்ப்பாணம் புங்குடுதீவு ஊரதீவு சிவன் கோவில் பூசகரின் கொலை தொடர்பில் மூவரை ஊர்காவற்துறை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

ஊரதீவு பாணாவிடை சிவன் கோவிலில் பணியாற்றி வந்த கிளிநொச்சியை சேர்ந்த இராசையா இராசரூப சர்மா என்ற 32-வயது பூசகரின் சடலம் கோவில் குளக்கரையிலிருந்து மீட்கப்பட்டது.

சம்பவம் தொடர்பில் ஊர்காவற்துறை பொலிஸாரும் யாழ்ப்பாணம் தடயவியல் பொலிஸாரும் இணைந்து விசாரணைகளை முன்னெடுத்தனர்.

ஊர்காவற்துறை நீதவான் அந்தோனிப்பிள்ளை ஜூட்சன், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை சட்ட மருத்துவ அதிகாரி மயூரன் ஆகியோரும் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணைகளை நடத்தியிருந்தனர்.

பிடரியில் இரும்புக் கம்பியால் தாக்கப்பட்டு பூசகர் கொல்லப்பட்டுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

கொலையில் ஈடுபட்டவர்கள் சிசிடிவி கேமராக்களை புடுங்கி எடுத்துச் சென்றுள்ளனர்.

பூசகரின் உதவியாளரை கைதுசெய்து விசாரித்த பொலிஸார், அவர் கொடுத்த தகவலின் அடிப்படையில் ஆலய உதவியாளர்கள் மேலும் இருவரை கைது செய்துள்ளனர்.