July 8, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

“காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை மீட்டுத்தந்தால் போராட்டத்தை கைவிடுவோம்” -மனுவல் உதயச்சந்திரா

இலங்கை அரசும் சர்வதேசமும் எமது போராட்டங்களை ஏற்றுக் கொள்கிறார்கள் இல்லை என மன்னார் மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளைத் தேடும் சங்கத்தின் தலைவி மனுவல் உதயச்சந்திரா தெரிவித்தார்.

மன்னாரில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,


“சர்வதேச சிறுவர் தினத்தை எல்லா இடங்களிலும் கொண்டாடி வருகின்றனர். ஆனால் வடக்கு- கிழக்கு மாகாணங்களிலுள்ள சிறுவர்கள் பலர் காணாமல் போயுள்ளனர்.

ஓமந்தை ஊடாக பெற்றோருடன் வந்த சிறுவர்கள் காணாமல் ஆக்கப்பட்டுள்ளனர். தாய்- தந்தை பிள்ளைகள் அனைவரும் ஒன்றாகவே இராணுவத்திடம் சரணடைந்தனர். ஆனால் தற்போது பிள்ளைகளும் இல்லை. பெற்றோர்களும் இல்லை.

கடந்த 11 வருடங்களாக காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளைத்தேடி வருகின்றனர். காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை விடுவிப்பீர்கள் என்றால் நாங்கள் எந்த வித எதிர்ப்பு நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டிய அவசியம் இல்லை.

காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் எமக்கு தேவை அதனாலேயே வீதிகளில் நாங்கள் போராடுகின்றோம். எனவே, சர்வதேசம் எமது கோரிக்கைகளை ஏற்று காணாமல் ஆக்கப்பட்ட எமது உறவுகளைத் தேடித்தர வேண்டும்” என கேட்கின்றோம் என அவர் மேலும் தெரிவித்தார்.