May 25, 2025 21:10:38

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

யாழ். புத்தூர் அகழ்வாராய்ச்சி மக்களின் எதிர்ப்பால் இடைநிறுத்தப்பட்டது

யாழ்ப்பாணம் – வலிகாமம் கிழக்கு பிரதேச சபைக்குட்பட்ட புத்தூர் பகுதியில் தொல்பொருள் திணைக்களத்தினரால் இன்றைய தினம் முன்னெடுக்கப்பட்ட அகழ்வாராய்ச்சி நடவடிக்கை  மக்களின் எதிர்ப்பை அடுத்து இடைநிறுத்தப்பட்டுள்ளது.

கடந்த மாதத்தில் அகழ்வாராய்ச்சி பணிகளுக்காக அதிகாரிகள் இந்தப் பகுதிக்கு சென்றிருந்த போது, அதற்கு மக்கள் எதிர்ப்பு தெரிவித்தமையினால் அதிகாரிகள் அங்கிருந்து திரும்பிச் சென்றிருந்தனர்.

இந்நிலையில் மீண்டும் இன்றைய தினம் அங்கு வந்த அதிகாரிகள் நிலத்தை தோண்டியுள்ளனர்.

இதன்போது அங்கு கூடிய பொதுமக்களும், பிரதேச சபை உறுப்பினர்களும் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதனை தொடர்ந்து அகழ்வாராய்ச்சி பணிகளை இடைநிறுத்திய அதிகாரிகள் அங்கிருந்து சென்றுள்ளனர்.