![](https://i0.wp.com/tamilavani.com/wp-content/uploads/2020/10/parliment-5.jpg?fit=1000%2C563&ssl=1)
பாராளுமன்ற அறிக்கைகளை மூன்று மொழிகளிலும் அச்சிடுவதற்கு பெருமளவு செலவு ஏற்படுவதனால் உறுப்பினர்கள் கோரும் மொழிகளில், தேவையான எண்ணிக்கைக்கு ஏற்ப அவற்றை அச்சிட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன சபைக்கு அறிவித்துள்ளார்.
பாராளுமன்றம் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் கூடிய நிலையில் சபாநாயகர் அறிவிப்பு வேளையில் இந்த தகவலை தெரிவித்துள்ளார்.
அத்தோடு, பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் அறிக்கைகள் எந்த மொழியில் வேண்டும் என்பதை பதிவு செய்து வழங்குமாறு உறுப்பினர்களை சபாநாயகர் கோரினார்.
இதன்மூலம் அறிக்கைகளைத் தேவையற்று மூன்று மொழிகளிலும் பெருமளவு அச்சிடுவதனை தவிர்த்து செலவுகளைக் குறைக்க முடியும் என்றார்.
இதேவேளை, இறுவட்டுகளில் தகவல்களை வழங்கும் செயற்பாடும் நிறுத்தப்படுமாயின் அதுவும் நல்லதொரு திட்டமாக அமையும், ஏனெனில் சூழலுக்கு இதனால் பாதிப்பு ஏற்படுகின்றது என சபாநாயகர் குறிப்பிட்டார்.
எனவே அறிக்கைகளில் முடிந்தளவு இணைய வழிமுறை மூலமாகப் பெற்றுக்கொள்ளும் வேலைத்திட்டத்தை முதன்மைப்படுத்திச் செயற்படக் கூடிய வகையில் கவனம் செலுத்த வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.