July 4, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

யாழ்.மாவட்ட தீவுகளுக்கு அரச படகுச்சேவையை ஆரம்பிக்குமாறு ஸ்ரீதரன் எம்.பி வேண்டுகோள்

யாழ்.மாவட்டத்தில் உள்ள தீவுகளுக்கு அரச படகுச்சேவைகள் உடனடியாக ஆரம்பிக்கப்பட வேண்டுமென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரன் சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சியிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அனலைதீவு, நெடுந்தீவு, நயினாதீவு, எழுவைதீவு ஆகிய தீவுகளுக்கு அரச அம்புலன்ஸ் படகுச் சேவை இல்லாதுள்ளது. யாழ்.மாவட்டத்தில் தரைத்தொடர்பு இல்லாத தீவுகள் அனைத்திலும் இதே நிலைதான் காணப்படுகிறது. அதேபோன்று வேலணை , ஊர்காவற்றுறை வைத்தியசாலைகளும் பாரிய குறைபாடுகளுடன்தான் இயங்குகின்றன எனவும் அவர் குறிப்பிட்டார்.

மிகவும் குறைபாடுகளுடன் இயங்கும் நெடுந்தீவு வைத்தியசாலையிலிருந்து யாழ்.வைத்தியசாலைக்கு நோயாளிகளை கொண்டுவர அரச படகுச்சேவையொன்று உடனடியாக ஆரம்பிக்கப்பட வேண்டும்.

அங்கு ஒருவருக்கு பாம்பு தீண்டினாலோ அல்லது திடீர் சுகவீனமடைந்தாலோ அவரை உடனடியாக யாழ் போதனா வைத்தியசாலைக்கு கொண்டவரக்கூடிய வசதிகள் இல்லை.

நெடுந்தீவிலிருந்தான 13 கடல் மைல்கள் பயணம் மிகவும் ஆபத்தானது. அரச ஊழியர்கள் முதல் அனைத்து தொழிலாளர்களும் உயிர் அச்சுறுத்தல்களுக்கு மத்தியில்தான் இந்தப் பயணத்தை மேற்கொள்கின்றனர் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

ஸ்ரீதரன் எம்.பியின் வேண்டுகோளை அடுத்து, இந்த விடயம் தொடர்பில் முக்கியத்துவம் கொடுத்து நடவடிக்கை எடுப்பதாக சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி இதன்போது உறுதியளித்தார்.