October 5, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

“எனது மகனை அரசியலுக்கு கொண்டுவரும் எண்ணம் கிடையாது”; முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா

எனது மகனை அரசியலுக்குள் கொண்டுவரும் எண்ணம் இல்லை என்று முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி தனது மகனை அரசியலுக்கு அழைத்து வருவதற்காக திட்டமிடுவதாக அண்மையில் சமூக ஊடகங்களில் வெளியான செய்திகள் குறித்து கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

இணைய ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் தெரிவிக்கப்பட்ட கருத்து தவறாக புரிந்துகொள்ளப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தனது மகன் அரசியலுக்கு பிரவேசிப்பார் என ஒருபோதும் நான் கூறவில்லை.நாட்டைக் காப்பாற்ற இளைஞர்கள் முன்வந்தால், தனது மகனும் தனது பங்களிப்பைச் செய்வார் என்றும், அதற்கு எந்த ஆட்சேபனையும் இல்லை என்றே கூறியிருந்தேன்.

இந்த நிலையில் அவர் மேலும் விளக்கமளிக்கையில்;

இந்த நாட்டு மக்களுக்காக நேர்மையாக பணியாற்ற முன்வந்து நாங்கள் நிறைய இழந்துவிட்டோம். சில சமூக பிரச்சினைகளுக்கு எதிராக நான் சமீபத்தில் குரல் எழுப்பிய காரணத்தால் எனது ஹொரகொல்ல வீட்டை இழக்க நேரிட்டுள்ளது.

நான் என் தந்தையையும், என் கணவனையும், என் கண்களில் ஒன்றையும் இழந்ததைப் போல, எனது ஒரே மகனையும் இழக்க விரும்பவில்லை என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.