October 5, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

வீட்டுத் திட்ட நிதி வழங்கக் கோரி யாழ். மாவட்ட செயலகம் முன்பாக கவனயீர்ப்பு போராட்டம்

வீட்டுத் திட்ட நிதியினை முழுமையாக வழங்குமாறு கோரி யாழ். மாவட்டச் செயலகம் முன்பாக கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்றுஇன்று காலை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் – மானிப்பாய் பிரதேச செயலகப் பிரிவு, ஆனைக்கோட்டை ஜெ/132 மற்றும் ஜெ/133 கிராம உத்தியோகத்தர் பிரிவுகளில் 2018 ஆம் ஆண்டு அப்போதைய அரசாங்கத்தினால் ஏழரை இலட்சம் ரூபாய் பெறுமதியான வீட்டுத் திட்டம் வழங்கப்பட்டது.

அதில்,இதுவரை இரண்டு கட்டங்களாக ஒரு இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் நிதி மாத்திரமே தற்போது வரை வழங்கப்பட்டுள்ளதாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்கள் தெரிவித்துள்ளனர்.

அத்துடன், குறித்த பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் அரசாங்கம் வழங்கிய பாதியளவில் முடிக்கப்பட்ட வீடுகளிலேயே வசித்து வருவதாகவும் அவர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

மேலும், இது தொடர்பாக அரசாங்க அதிகாரிகளைத் தொடர்பு கொள்ளும்போது அவர்கள் ஒவ்வொருவரும் வேறு ஒருவர் மீது பழி போட்டுவிட்டு தப்பிக்கொள்வதாகவும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த திட்டத்தை வழங்கும்போது தாங்கள் வசித்து வந்த தற்காலிக வீடுகளை இடித்துவிட்டே, குறித்த புதிய வீட்டுத் திட்டத்தினை மேற்கொண்டதாகவும், தற்போது வசிப்பதற்கு இடமின்றி வெயில் மற்றும் மழைக்கு மத்தியில் அரைகுறை வீடுகளில் வசித்து வருவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், தமக்குரிய நிலுவையாகவுள்ள நிதியை விரைவாகப் பெற்றுத்தருமாறு கோரியுள்ள மக்கள், யாழ். மாவட்ட அரசாங்க அதிபர், தேசிய வீடமைப்பு அதிகார சபையினர் மற்றும் வடக்கு மாகாண ஆளுநர் ஆகியோருக்கான தமது கோரிக்கை அடங்கிய மகஜரையும் கையளித்துள்ளனர்.