July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

கணக்கறிக்கை மதிப்பாய்வுக்காக கோப் குழுவில் ஆஜராகுமாறு ஸ்ரீலங்கா கிரிக்கெட்டுக்கு மீண்டும் அழைப்பு

ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்துக்கு, பொது நிறுவனங்கள் தொடர்பான பாராளுமன்றக் குழு (கோப்) முன்னிலையில் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 6 ஆம் திகதி மீண்டும் ஆஜராகுமாறு  அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இறுதியாக கடந்த பெப்ரவரி மாதம் 11 ஆம் திகதி ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனம் கோப் குழு முன்னிலையில் அழைக்கப்பட்டிருந்தபோது, அதிகாரிகள் உரிய தயார்படுத்தலுடன் வருகை தராத காரணத்தால் அக்கூட்டம் இடைநடுவில் நிறுத்தப்பட்டது.

அத்தோடு, மீண்டும் ஒரு மாதத்தில் கோப் குழு முன்னிலையில் ஆஜராகுமாறு பணிக்கப்பட்டது.

இந்நிலையிலேயே, ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனம் ஏப்ரல் 6 ஆம் திகதி மீண்டும் அழைக்கப்பட்டுள்ளது.

பாராளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் சரித ஹேரத் தலைமையிலான அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழு மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் ஏழு அரசாங்க நிறுவனங்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது.

இதற்கமைய, மார்ச் 23 ஆம் திகதி லங்கா மினரல் சான்ட்ஸ் லிமிடட் நிறுவனம் கோப் குழு முன்னிலையில் அழைக்கப்பட்டிருப்பதுடன், இலங்கையில் புதிய ஏற்றுமதி செயற்பாட்டு வலயங்களை அமைக்கும் நடவடிக்கைகள் குறித்த மதிப்பீடு பற்றி மார்ச் 24 ஆம் திகதி இக்குழுவில் ஆராயப்படவுள்ளது.

இதனையடுத்து, பேராதனை பல்கலைக்கழகத்தின் விஞ்ஞான பட்டப்பின்படிப்பு நிறுவனம் எதிர்வரும் மார்ச் 26 ஆம் திகதி கோப் குழுவில் விசாரணைக்கு உட்படுத்தப்படவுள்ளது.

ஏப்ரல் 7 ஆம் திகதி தேசிய பண்ணை விலங்கு அபிவிருத்தி சபையும், ஏப்ரல் 20 ஆம் திகதி இலங்கை உதைப்பந்து சம்மேளனம் மற்றும் ஏப்ரல் 23 ஆம் திகதி தேசிய திரைப்படக் கூட்டுத்தாபனத்தில் கடந்த காலங்களில் இடம்பெற்ற மோசடிகள் என்பன அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுவில் விசாரணைக்கு உட்படுத்தப்படவுள்ளன.