
தலைமன்னார் பியர் பகுதியில் உள்ள புகையிரத கடவையில் கடந்த 16 ஆம் திகதி தனியார் பஸ் ஒன்று ரயிலுடன் மோதி விபத்துக்குள்ளானதில் உயிரிழந்த மாணவனுக்கு நீதி கோரி இன்று (திங்கட் கிழமை) காலை குறித்த பகுதியில் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
பாடசாலை மாணவர்கள், பெற்றோர்கள், பொது அமைப்புகளின் பிரதிநிதிகள்,சர்வமத தலைவர்கள், அரசியல் பிரதிநிதிகள் இணைந்து பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து குறித்த போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.
குறித்த விபத்தில் மன்னார் பியர் அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் தரம் 9 இல் கல்வி கற்று வந்த பாலச்சந்திரன் தருண் என்ற மாணவன் உயிரிழந்ததோடு,மாணவர்கள், பொது மக்கள் என 25 பேர் வரை பலத்த காயங்களுக்கு உள்ளாகியிருந்தனர்.
காலை 7.45 மணியளவில் தலைமன்னார் பியர் அரசினர் தமிழ் கலவன் பாடசாலைக்கு முன்பாக ஆரம்பமான குறித்த போராட்டம் தலைமன்னார் பியர் பகுதியில் உள்ள ரயில் கடவை வரை சென்று நிறைவடைந்தது.
இதன்போது, ரயில் கடவைக்கான தடையினை புதிதாக அமைத்து, அதற்கான பாதுகாப்பு ஊழியரை புதிதாக நியமிக்க கோரியும் வயோதிபர் இல்லாமல் நடுத்தர வயதுடையவர்களை கடமையில் ஈடுபடுத்த வேண்டும் எனவும் போராட்டக்காரர்கள் கோரிக்கை முன்வைத்தனர்.
அத்தோடு, குறித்த ரயில் கடவை பொலிஸாரின் கண்காணிப்பின் கீழ் இருக்க வேண்டும் எனவும் அவர்கள் கேட்டுக்கொண்டார்கள்.
போராட்டத்தில் ஈடுபட்டவர்களோடு மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஏ.ஸ்ரான்லி டி மேல், மன்னார் பிரதேச செயலாளர், புகையிரத திணைக்கள அதிகாரி ஆகியோர் கலந்துரையாடினர்.
கோரிக்கைகளை நிவர்த்தி செய்ய உடனடியாக துரித நடவடிக்கைகளை முன்னெடுப்பதாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் அரசாங்க அதிபர் உறுதியளித்ததையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.
குறித்த ஆர்ப்பாட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் மற்றும் மன்னார் பிரதேச சபை உறுப்பினர்கள் என பலர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.