February 22, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

ஜெனிவா பரபரப்புக்கு மத்தியில் இலங்கையின் ஜனாதிபதி, பிரதமர் அரபுத் தலைவர்களுக்கு தொலைபேசி அழைப்பு

இலங்கையின் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ மற்றும் பிரதமர் மகிந்த ராஜபக்‌ஷ ஆகியோர் அரபுத் தலைவர்களுக்கு தொலைபேசி அழைப்புகளை மேற்கொண்டுள்ளனர்.

ஜனாதிபதி கோட்டாபய, இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பின் செயலாளருக்கும் பிரதமர் மகிந்த பஹ்ரைனின் பிரதி மன்னர் சல்மான் பின் ஹமாதுக்கும் தொலைபேசி அழைப்புகளை மேற்கொண்டுள்ளனர்.

இஸ்மாமிய ஒத்துழைப்பு அமைப்பு 57 அரபு நாடுகளின் கூட்டணியாகும்.

ஐநா மனித உரிமைகள் பேரவையில் தீர்மானம் மீதான வாக்கெடுப்பு இடம்பெறவுள்ள நிலையில், இலங்கை இறுதி முயற்சிகளில் இறங்கியுள்ளது.

‘இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பின் செயலாளருக்கு இலங்கையின் ஜனாதிபதியிடம் இருந்து தொலைபேசி அழைப்பொன்று கிடைத்ததாகவும், இரு தரப்பு உறவுகள் மற்றும் இலங்கை முஸ்லிம்களின் நிலைமைகள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டதாகவும்’ அந்த அமைப்பு டுவிட்டர் செய்தியொன்றை வெளியிட்டுள்ளது.

இதேநேரம், தான் பஹ்ரைனின் பிரதி மன்னர் சல்மான் பின் ஹமாதுக்கு தொலைபேசி அழைப்பொன்றை மேற்கொண்டு இரு தரப்பு ஒத்துழைப்புகள் குறித்து கலந்துரையாடியதாக பிரதமர் மகிந்த ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார்.

ஐநா பேரவையில் இலங்கைக்கு அரபு நாடுகளின் ஆதரவைத் திரட்டும் முயற்சியில் பாகிஸ்தான் ஈடுபட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.