போதைப்பொருள் கடத்தலை தடுக்கும் நோக்கில் அம்பாறை மாவட்டத்தின் நிந்தவூர் பகுதியில் உள்ள அல்லிமூலை அருகில் புதிய சோதனைச் சாவடியொன்று அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கடந்த புதன்கிழமை திடீரென அப்பகுதிக்கு வந்த சுமார் 15 க்கும் அதிகமான இராணுவத்தினர் நிந்தவூர் பகுதியில் உள்ள அல்லிமூலை சந்திக்கு அருகே சோதனைச் சாவடி ஒன்றை அமைத்து வாகனங்களை பரிசோதனை செய்துள்ளனர்.
மேலும், இப்பகுதியில் இடம்பெறுகின்ற போதைப்பொருள் கடத்தல்களை முறியடிப்பதற்காக இம்முகாம் அமைக்கப்பட்டுள்ளதுடன், இடையிடையே அம்பாறை மாவட்டத்தின் பல பகுதிகளில் இராணுவத்தின் மோட்டார் சைக்கிள் படையணி ரோந்து பணியில் ஈடுபட்டு வருகிறது.
இதுதவிர, இரவு வேளையில் ஐவர் கொண்ட இராணுவத்தினரின் குழு ஒன்று மற்றுமொரு தேடுதல் நடவடிக்கை ஒன்றினை முன்னெடுத்து வருகின்றது.
மேலும், குறித்த பகுதியில் பாதுகாப்பினை உறுதிப்படுத்தும் முயற்சியில் இவர்கள் பகல்- இரவு வேளைகளில் வீதிகளில் செல்லும் சந்தேகத்திற்கு இடமான வாகனங்களை இடைமறித்து சோதனை செய்து வருகின்றனர்.
கொரோனா அனர்த்தத்தின் பின்னர் அம்பாறை மாவட்டத்தில் இடம்பெற்றுவரும் கஞ்சா கடத்தல்கள், அனுமதிப் பத்திரமின்றி மணல் அகழ்வு போன்ற சம்பவங்களை முறியடிப்பதற்காக இந்த சோதனை சாவடி அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், கொரோனா சுகாதார நடைமுறைகளை கண்காணித்தல், முகக்கவசம் அணியாதோரை வழிப்படுத்தல் உள்ளிட்ட பாதுகாப்பு விடயங்கள் உள்ளிட்டவைகளில் கவனம் செலுத்தும் முகமாகவும் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதன்படி, அம்பாறை மாவட்டத்தில் மருதமுனை, கல்முனை. நற்பிட்டிமுனை, சாய்ந்தமருது, காரைதீவு, நிந்தவூர், சம்மாந்துறை, அட்டாளைச்சேனை, அக்கரைப்பற்று ஆகிய பகுதிகளில் இருந்து குறித்த சோதனைச் சாவடியின் ஊடாக பயணம் செய்பவர்கள் வாகனங்கள் பரிசோதனை செய்யப்பட்டு, அதன் இலக்கங்களைப் பதிவு செய்கின்ற நடவடிக்கை முன்னெடுக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.